சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் உருகுவே மற்றும் எகிப்து அணிகள் மோதுகின்றன.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
இந்த உலகக் கோப்பைக்கான ஆட்டங்கள் துவங்கியுள்ளன. இன்று நடக்கும் ஆட்டத்தில் உருகுவே மற்றும் எகிப்து அணிகள் மோதுகின்றன.
பிரிவு ஏ
எகிப்து - உருகுவே
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி இரவு 5.30 மணி
ஃபிபா உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக உருகுவே தோல்வியடைந்ததில்லை. அதே நேரத்தில் மற்றொரு ஆப்பிரிக்க நாடான எகிப்து இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களில் 2ல் டிரா, 2ல் தோல்வி அடைந்து ஒரு வெற்றி கூட பெற்றதில்லை.
முக்கிய வீரர்கள்
எகிப்து - தற்போது உலகளவில் மிகவும் பிரபலமான, திறமையுள்ள வீரர்கள் வரிசையில் மொகம்மது சாலாஹ் இடம்பெற்றுள்ளார். ஆனால், காயம் காரணமாக அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்தது. அவர் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
உருகுவே - கடி மன்னன் லூயில் சுவாரஸ், டியாஜோ கோடின் போன்றோர் இருந்தாலும் நடுகள வீரரான லூகாஸ் டோரிராவின் மீதோ பலருடைய கண்ணும் உள்ளது. உருகுவேவுக்காக அதிரடியாக விளையாடுவதுடன், எதிரணியின் அதிரடியை தடுத்து நிறுத்தக் கூடியவர். அவரை கொத்திச் செல்ல பல முன்னணி கிளப்கள் முயற்சி செய்து வருகின்றன.
1934க்குப் பிறகு 1990ல் நடந்த உலகக் கோப்பையில் எகிப்து பங்கேற்றது. ஆனால், பிரிவு சுற்றைத் தாண்டியதில்லை. தற்போது சாலாஹை நம்பி, அவருடைய உதவியால் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளது.
1930 மற்றும் 1950ல் உலகக் கோப்பையை வென்றுள்ள உருகுவே கடந்த உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது.
ஏ பிரிவில் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா அணிகளும் உள்ளன. இந்தப் பிரிவில் இருந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறக் கூடிய அணிகளாக எகிப்து மற்றும் உருகுவே கருதப்பட்டன. அதில் யார் முதலில் முந்திக் கொள்ளப் போகிறார்கள் என்பதே தற்போதைய கேள்வி. சவுதி அரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கி்ல வென்று, புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.