சென்னை: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் எகிப்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே வென்றது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
இந்த உலகக் கோப்பைக்கான ஆட்டங்கள் துவங்கியுள்ளன. ஏ பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யா 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வென்றது. போட்டியின் இரண்டாவது நாளான இன்று நடந்த ஆட்டத்தில் உருகுவே மற்றும் எகிப்து அணிகள் மோதின
----
பிரிவு ஏ
உருகுவே - எகிப்து
1 - 0
----
ஃபிபா உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்பிரிக்க அணிகளுக்கு எதிராக உருகுவே தோல்வியடைந்ததில்லை. அதே நேரத்தில் மற்றொரு ஆப்பிரிக்க நாடான எகிப்து இதுவரை விளையாடிய நான்கு ஆட்டங்களில் 2ல் டிரா, 2ல் தோல்வி அடைந்து ஒரு வெற்றி கூட பெற்றதில்லை.
1934க்குப் பிறகு 1990ல் நடந்த உலகக் கோப்பையில் எகிப்து பங்கேற்றது. ஆனால், பிரிவு சுற்றைத் தாண்டியதில்லை. தற்போது சாலாஹை நம்பி, அவருடைய உதவியால் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளது.
1930 மற்றும் 1950ல் உலகக் கோப்பையை வென்றுள்ள உருகுவே கடந்த உலகக் கோப்பையில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறியது.
இன்று நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் துவக்கம் முதலே கடுமையான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டன. ஆட்டத்தில் 58 சதவீத நேரம் பந்து முன்னாள் சாம்பியனான உருகுவே வசமே இருந்தது. இரு அணிகளுக்கும் தலா மூன்று முறை கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது தடுத்து நிறுத்தப்பட்டது.
ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் 91வது நிமிடத்தில் உருகுவேயின் ஜோஸ் ஜிமனெஸ் அபாரமாக கோலடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார். காயம் காரணமாக விளையாடாமல் இருந்த மொகம்மது சாலாஹ் எகிப்து அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடவில்லை.
ஏ பிரிவில் ரஷ்யா ஏற்கனவே 3 புள்ளிகளுடன் உள்ளது. தற்போது உருகுவேவும் 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்து வரும் ஆட்டங்களில்தான் அடுத்தச் சுற்றுக்கு நுழையப் போவது யார் என்பது தெரியவரும்.