ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டிகளில் வங்கதேச அணிக்கு எதிரான கால்பந்து போட்டியில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுகளின் தொடக்க நிலை ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய கால்பந்து அணி நட்சத்திர வீரர்கள் இல்லாமல் களமிறங்கியுள்ளது. இதனால் இந்த அணி இந்திய பி அணியாகவே பார்க்கப்படுகிறது.

ஆசிய விளையாட்டு போட்டிகளில் கால்பந்து பிரிவில் மட்டும் மொத்தமாக 21 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த 21 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி விளையாடிய முதல் போட்டியில் சீனாவிடம் 5-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
இதனால் இன்று வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முட்டி மோதின. ஆனால் இரு அணிகளின் டிஃபெண்டர்களும் சிறப்பாக செயல்பட்டதால், கோல் இன்றி முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இதன்பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் 83 நிமிடங்கள் வரை கோல் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைய வாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது. ஆனால் 84வது நிமிடத்தில் வங்கதேச அணி செய்த தவறால், இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல் அந்த வாய்ப்பை அனுபவ வீரர் சுனில் சேத்ரி எடுத்துக் கொண்டார்.
அந்த பெனால்டி வாய்ப்பில் சுனில் சேத்ரி கோல் அடிக்க, இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பின்னர் இரண்டாம் பாதி முடிவில் இந்திய அணி வெற்றிபெற்றது. 39 வயதாகும் சுனில் சேத்ரி, சீனா அணிக்கு எதிரான போட்டியில் 85 நிமிடங்கள் வரையில் களத்தில் இருந்தார். அதேபோல் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியிஒல் 94 நிமிடங்கள் களத்தில் இருந்துள்ளார். இது இளம் வீரர்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.