
சிங்க நடை
ஜெர்மனியின் ஆட்டம் எடுத்த எடுப்பிலேயே பட்டையைக் கிளப்பி விட்டது. ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கி விட்டனர் பிரேசில் வீரர்களை. அவர்களால எழுந்திருக்கவே முடியவில்லை. ராஜ நடையுடன் ஜெர்மனி வீரர்கள் ஆடிய விதம் அனைவரையும் பரவசப்படுத்தி விட்டது.

புலிப் பாய்ச்சல்
அதேபோல கோல் போடுவதில் புலிப் பாய்ச்சலைக் காட்டினர் ஜெர்மனி வீரர்கள். யாருமே எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து கோல்கள் விழுந்ததால் மைதானமே அதிர்ச்சியாகிப் போய்க் காணப்பட்டது.

6 நிமிடத்தில் 4 கோல்கள்
அதை விட ஆறே நிமிடத்தில் 4 கோல்களைப் போட்டு ஜெர்மனி வீரர்கள் பிரேசில் அணியை நிலை குலைய வைத்து விட்டனர். மனதளவில் அப்போதே செத்துப் போய் விட்டது பிரேசில். அத்தோடு நில்லாமல், அரை மணி நேரத்திற்குள்ளேயே அவர்கள் 6 கோல்களை அடித்து புதிய வரலாற்றையும் படைத்தனர்.

ஆரம்பித்து வைத்த முல்லர்
தாமஸ் முல்லர் ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்தில் அருமையான முதல் கோலைப் போட்டு ஆரம்பித்து வைத்தார். அடுத்து 23வது நிமிடத்தில் சாதனையாளர் மிரஸ்லோவ் குளோஸ் அபாரமான ஒரு கோலை அடித்தார். அதுவரை எல்லாம நார்மலாகத்தான் இருந்தது. ஆனால் குளோஸ் கோலுக்குப் பிறகு என்ன நடந்தது என்பது வரலாறாகிப் போனது.

அடுத்தடுத்து கோல்கள்
தொடர்ந்து 24வது நிமிடத்திலும், 26வது நிமிடத்திலும் டோனி க்ரூஸ் இரண்டு கோல்களைப் போட்டார். அதைத் தொடர்ந்து 29வது நிமிடத்தில், சாமி கெதிரா ஒரு கோலடித்தார். போட்டி 5-0 என்ற கணக்கில் பிரேசிலை விட்டு விலகிப் போய் விட்டு.

அரை மணி நேரத்திற்குள்ளேயே உயிர் போச்சு
இப்படி போட்டி தொடங்கி அரை மணி நேரத்திற்குள்ளேயே பிரேசிலைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது ஜெர்மனி. இதை ஜீரணிக்கவே முடியாமல் போன பிரேசில் ரசிகர்கள் கதறி அழுததைப் பார்க்க முடிந்தது. பலர் அப்படியே அமைதியில் சமைந்து போய் விட்டனர். ஆட்டம், பாட்டம் நின்று போனது, மைதானே அமைதியிலும், அதிர்ச்சியிலும் மூழ்கிப் போனது. பலர் ஸ்டேடியத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.

தியாகோ சில்வா, நெய்மார் இல்லாததால்
கேப்டன் தியாகோ சில்வா நேற்றைய போட்டியில் தடை காரணமாக விளையாட முடியவில்லை. காயமடைந்த நெய்மாரும் இல்லை. இது பிரேசில் அணியை வெகுவாக பாதித்து விட்டதை நேற்று கண்கூடாக காண முடிந்தது.

100 வருடத்தில் இல்லாத மோசமான தோல்வி
100 வருட பிரேசில் கால்பந்து வரலாற்றில் இப்படி ஒரு மோசமான தோல்வியை சர்வதேச அளவில் அது சந்தித்ததே இல்லை.

நாடே துக்கத்தில்
நாடே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. என்ன நடந்தது என்பதே புரியாமல் பிரேசில் ரசிகர்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர். துக்க தினம் போல நேற்றைய நாள் பிரேசிலுக்கு மாறிப் போனது.

அதிபரை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்
அணி கேவலமாக தோற்றுப் போனதை ஜீரணிக்க முடியாத ரசிகர்கள் பலர் கெட்ட வார்த்தையில் பிரேசில் வீரர்களையும், அதிபர் தில்மா ருஸ்ஸாபையும் திட்டியதைக் காண முடிந்தது.

2வது பாதியிலும் தொடர்ந்த சித்திரவதை
முதல் பாதியில் 5 கோல்களைப் போட்டு விட்ட ஜெர்மனி 2வது பாதியில் மேலும் 2 கோல்களைப் போட்டது. 69வது நிமிடத்தில் ஆன்ட்ரே ஸுர்ரெல் 6வது கோலைப் போட்டார். அவரே 79வது நிமிடத்தில் 7வது கோலையும் போட்டார். அதுவரை பிரேசிலால் ஒரு கோல் கூட அடிக்க முடியாத நிலையில் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. கடைசி நேரத்தில் பிரேசில் வீரர் ஆஸ்கர் ஒரு கோலடித்தார். ஆனால் அதை வைத்துக் கொண்டு ஊறுகாய் கூட போட முடியாத நிலை.

1920க்குப் பிறகு
இதற்க முன்பு 1920ம் ஆண்டு உருகுவேயிடம் பிரேசில் அணி 6-0 என்ற கோல் கணக்கில் படு தோல்வியைச் சந்தித்திருந்தது. அதன் பிறகு இப்போதுதான் கேவலமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

8வது முறையாக
ஜெர்மனி 8வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இது ஒரு புதிய சாதனையாகும்.

யாருடன் மோதல்...
இன்று 2வது அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் அர்ஜென்டினாவும், நெதர்லாந்தும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி, 13ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜெர்மனியைச் சந்திக்கும்.


Click it and Unblock the Notifications













