மாரடோனா கோபம்
அர்ஜென்டினா டிராவால் ரசிகர்களைப் போலவே மாரடோனாவும் கோபமாக உள்ளார். ஆனால் தனது சிஷ்யரான மெஸ்ஸி மீது கோபத்தைக் காட்டாமல் பயிற்சியாளர் மீது பாய்ந்துள்ளார்.
ஊர்ப் பக்கம் வர முடியாது
மாரடோனா கூறுகையில், அர்ஜென்டினா அணி இதேபோல விளையாடிக் கொண்டிருந்தால் சம்பாவ்லி நாட்டுக்கு திரும்பி வர முடியாது. தனது உத்திகளை அவர் மாற்றியாக வேண்டும். இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று கூறியுள்ளார் மாரடோனா.
வெட்கம்
அர்ஜென்டினா டிரா செய்தது வெட்கமாக உள்ளது, அவமானமாக உணர்கிறேன். மெஸ்ஸிக்கு நல்லதொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அது தவறிப் போனது துரதிர்ஷ்டவசமானது.
முன்னாடியே திட்டமிட வேண்டாமா
ஐஸ்லாந்து வீரர்கள் நல்ல உயரம். நாம் உயரம் குறைவானவர்கள். இது முன்பே தெரிந்தும் அதற்கேற்ப திட்டமிட்டிருக்க வேண்டாமா. மொத்த அணியிலும் இந்த சொதப்பல் திட்டமிடல் குறித்த கோபம் இருப்பதாக நான் அறிகிறேன் என்று கூறியுள்ளார் மாரடோனா.
முதல் போட்டியிலேயே அசத்திய ஐஸ்லாந்து
ஐஸ்லாந்து அணிக்கு இதுதான் முதல் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியாகும். முதல் போட்டியிலேயே சிங்கத்துடன் எதிர்த்து மோதி டிரா செய்து அசத்தி விட்டது. அதுவும் மெஸ்ஸி மாதிரியான மாபெரும் வீரரைக் கோலடிக்க விடாமல் தடுத்தது ஐஸ்லாந்தால் மறக்க முடியாத சாதனையாகும்.
எப்பவுமே மெஸ்ஸி இப்படித்தான்
மெஸ்ஸியைப் பொறுத்தவரை அவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் சொதப்புவது படு சாதாரணம். அதேசமயம், கிளப் போட்டிகளில் பிற சர்வதேச போட்டிகளில் பிரமாதமாக ஆடுவார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்தப் போட்டி அதை மேலும் வலுப்படுத்த உதவியுள்ளது.
மெஸ்ஸி மீது மாரடோனா பாசம்
ஆனால் மெஸ்ஸியை மட்டும் மாரடோனா திட்டவே மாட்டார். அதையேதான் இப்போதும் செய்துள்ளார் மாரடோனா. மெஸ்ஸியை திட்டாத அவர் பயிற்சியாளரை மட்டும் கடிந்து கொண்டுள்ளார். சம்பாவ்லி உத்திகளை மாற்றாமல் இப்படியே இருந்தால் அவரால் நாடு திரும்ப முடியாது என்றும் மாரடோனா கோபம் காட்டியுள்ளார்.