ஈரானுக்கு எதிராக “போர்” தொடுப்போம்.. மெஸ்ஸி அழைப்பு
பிரேசிலியா: போஸ்னியாவுக்கு எதிரான முதல் போட்டியை வென்று விட்டாலும் கூட இது நம்ம அர்ஜென்டினா மாதிரியே இல்லையே என்று பல ரசிகர்களும் அங்கலாய்க்கும்படி இருந்தது அர்ஜென்டினாவின் முதல் ஆட்டம்.
இதையடுத்து ஈரானுக்கு எதிரான 2வது போட்டியில் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தனது அணியினருக்கு கேப்டன் லியோனல் மெஸ்ஸி அழைப்பு விடுத்துள்ளார்.
தனது அணியினரிடம் அட்டாக்கிங் தகுதி நிறையவே உள்ளதாகவும், அதன் மீது பயிற்சியாளரும், ரசிகர்களும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானை அடித்து நொறுக்குவோம்
இதுகுறித்து மெஸ்ஸி கூறுகையில், ஈரானுடன் நடைபெறும் போட்டியில் எங்களது அட்டாக்கை காணத் தயாராகுங்கள். அர்ஜென்டினா வீரர்களும் அதி தீவிரமாக இந்தப் போட்டியில் ஆட வேண்டும்.

நானும் ஹிகுயனும், அகுரோவும் சேர்ந்தால்
நான், ஹிகுயன், செர்ஜியோ அகுரோ ஆகியோர் இணைந்து ஆடும்போது அந்த அட்டாக்கின் தீவிரமே வேறு மாதிரி இருக்கும்.

நாங்க யாருன்னு தெரியும்ல..
நாங்கள் அர்ஜென்டினா வீரர்கள். நாங்கள் எப்படி ஆடுவோம் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. யாருடன் மோதுகிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி ஆடுகிறோம் என்பதுதான் முக்கியமானது.

போஸ்னியா ஆட்டத்தில் சொதப்பியது உண்மைதான்
போஸ்னியாவுடனான ஆட்டத்தின் முதல் பாதியில் நான் சரியாக ஆடவில்லை என்பதை நான் மறுக்க மாட்டேன். அது உண்மைதான் என்றார் அவர்.

ஹிகுயன் வருகிறார்
அர்ஜென்டினா அணியின் முக்கிய வீர்ர்களில் ஒருவரான கான்சாலோ ஹிகுயன் ஈரானுடன் நடைபெறும் போட்டியில் பங்கேற்கவுள்ளார். கடந்த போட்டியில் சப்ஸ்டிடியூட் வீரராக ஹிகுயன் களம் இறக்கப்பட்டு கோல் அடித்தார் என்பது நினைவிருக்கலாம்.

100வது போட்டியில் ஜேவியர்
அதேபோல தனது 100வது போட்டியாக இந்தப் போட்டியில் ஜேவியர் மாஸ்ஹெரானாவும் களம் இறங்குவார் என்று தெரிகிறது.

ஈரானும் சும்மா இல்லை
அதேசமயம் ஈரானைக் குறைத்து மதிப்பிட முடியாது. தனது முதல் போட்டியில் வலிமை வாய்ந்த நைஜீரியாவை 0-0 என்ற கணக்கில் அது டிரா செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications