சால்வடார்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கலுக்கு எதிரான ஆட்டத்தில் "ஹாட்ரிக்" வெற்றியைப் பறித்துள்ளது ஜெர்மனி.
முல்லரின் அபார ஆட்டத்தால் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கலை அடித்து வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஜெர்மனியின் தாமஸ் முல்லர், கடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் "கோல்டன் பூட்" விருதினை வென்றவர். இளம் வீரரான முல்லர் தன்னுடைய ஹாட்ரிக் கோல்களால் இந்த வெற்றியை ஜெர்மனிக்கு பரிசளித்துள்ளார்.

இந்த ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அடிக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் கோல் இதுவே ஆகும். போர்ச்சுக்கலின் நம்பிக்கை தூணாக கருதப் பட்டவர் கிரிஸ்டியானோ ரொனால்டோவாகத்தான் இருந்தது.
ஆனால், கடுமையான காயத்தால் அவதிப்பட்ட அவர் சளைக்காமல் இந்த போட்டியில் கலந்து கொண்டார். கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் தொடர்ந்து ஆட்டக்களத்தில் இருந்த போதும் காயம் காரணமாக அவரால் சுறுசுறுப்பாக விளையாட இயலவில்லை.
முதல் பாதியிலேயே ஜெர்மனி 3 கோல்களை அடித்து தன்னுடைய இடத்தை தக்க வைத்திருந்தது.இதனால் போர்ச்சுக்கல் வீரர்கள் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்து விட்டனர். இது போதாதென்று 37 ஆவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் வீரர் பெபெவும் சிவப்பு அட்டை மூலமாக "பெப்பே" காட்டி வெளியேற்றப்பட்டார்.
ஆட்டத்தின் 12-வது நிமிடத்தில் பெனால்டி கிக்கை கோலாக்கிய முல்லர் 45 மற்றும் 78-வது நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தார். ஹம்மல்ஸ் தன் பங்குக்கு 32-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.
முன்பாதி ஆட்டத்தில் முன்னிலையில் இருந்த தெம்புடன் ஆடிய ஜெர்மனி பிற்பாதியில் கோல் ஏதும் விழ விடாமல் பார்த்துக் கொண்டது. இதனால் ஜெர்மனி சிரமமின்றி வெற்றி பெற்றது.
துல்லியமான கோல், துடிப்பான பின்களம் என ஜெர்மனிக்கு எல்லாமே சரியாக அமைந்தது என்றால், பெபேவுக்கு சிவப்பு அட்டை வழங்கியது உள்பட போர்ச்சுக்கலுக்கு எதுவுமே சரியாக அமையவில்லை. மொத்ததில் ரொனால்டோவே இருந்தாலும், சரியான அணி அமைந்தால்தான் ஜெயிக்க முடியும் என்று ரசிகர்கள் மனதை தேற்றிக் கொள்வது தனிக்கதை.