ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி அயர்லாந்தை 3 - 2 என வீழத்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
பிரேசிலின் டி ஜெனிரோ நகரில் 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. கோலாகலமாக துவங்கிய விளையாட்டு திருவிழாவில் இந்தியா சார்பில் 118 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்திய ஹாக்கி அணி ஸ்ரீஜேஷ் தலைமையில் களமிறங்கியுள்ளது.
பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, அயர்லாந்து அணியுடன் இன்று மோதியது. துவக்கம் முதலே அசத்திய இந்திய அணிக்கு, 15வது நிமிடத்தில் ரகுநாத் முதல் கோல் அடித்தார். 27வது நிமிடத்தில் ரூபிந்தர் சிங் கோல் அடித்து, இந்தியாவுக்கு வலு சேர்த்தார்.
அயர்லாந்து சார்பில் (45வது நிமிடம்) ஜெர்மைன் கோல் அடித்தார். இதற்கு 49வது நிமிடத்தில் ரூபிந்தர் 2வது கோல் அடித்து பதிலடி தந்தார். கடைசி நேரத்தில் அயர்லாந்து சார்பில் கானர் (56) கோலை பதிவு செய்தார். முடிவில், இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி முதல் வெற்றியை பதிவு செய்தது ஹாக்கி அணி. அதேநேரத்தில் காலிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவைச் சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், குரூப் சுற்றில் ஜெர்மனி, நெதர்லாந்து, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகளை வென்றாக வேண்டும்.