இபோ: ஏழு கடல், ஏழு மலை தாண்டி குகையில் இருக்கும் கிளியை பிடிக்க வேண்டிய நிலையில் இருந்து, உரித்த வாழைப்பழத்தை வாயில் ஊட்ட வரும் நிலைக்கு மாறியும், அதை பயன்படுத்திக் கொள்ள இந்திய ஹாக்கி தவறிவிட்டது.
ஆறு நாடுகள் பங்கேற்கும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவின் இபோ நகரில் நடந்து வருகிறது.
இதில் லீக் ஆட்டங்களில் ஆர்ஜென்டினாவுடன் 3-2 என்ற கோல் கணக்கிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கிலும் இந்திய அணி தோல்வி அடைந்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 என, டிரா செய்த இந்திய அணி, மலேசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது.
அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அதிக கோல் வித்தியாசத்தில் வென்றால், பைனல்ஸ் நுழையும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நிலையில், நேற்று இந்திய அணி விளையாடியது.
இரண்டு முறை முன்னிலை பெற்ற நிலையிலும், கடைசியில் 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்தது.
ஆஸ்திரேலியா, அயர்லாந்தை தோற்கடிக்க வேண்டும். மலேசியா – இங்கிலாந்து ஆட்டம் டிராவானால், இந்திய அணிக்கு பைனல்ஸ் வாய்ப்பு கிடைக்கும் நிலை இருந்தது.
ஆஸ்திரேலியா 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனாவை வென்றது. இங்கிலாந்து 7-2 என்ற கோல் கணக்கில் வென்றது. கிட்டத்தட்ட எதிர்பார்த்தது நடந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிராக தோல்வியடைந்ததால், இந்தியாவுக்கு பைனல்ஸ் வாய்ப்பு பறிபோனது.