ரியோ டி ஜெனீரோ: ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியுறும் நிலையிலிருந்து மீண்டு வந்து டிராவில் போட்டியை முடித்தது.
இன்று மாலை நடந்த போட்டியில் ஜப்பான் கை ஓங்கியிருந்த நிலையில் கடைசிக் கட்டத்தில் இந்தியா வீறு கொண்டெழுந்தது. இதனால் போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் முதல் போட்டியை இந்தியா சந்தித்தது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்தது. கேப்டன் சுசீலா சானு தலைமையிலான இந்திய அணி ஜப்பான் வீராங்கனைகளுடன் கடுமையாக மோதினர்.
இந்திய அணியில் பல அனுபவம் வாய்ந்த வீராங்கனைகள் இருந்தனர். ஆரம்பத்தில் ஜப்பானை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. ஜப்பான் தரப்பில் முதல் இரு கால் மணி நேர ஆட்ட நேர முடிவில் 2 கோல்கள் அடிக்கப்பட்ட நிலையில் இந்தியத் தரப்பில் கடைசிக் கட்டத்தில் சுதாரித்து ஆக்ரோஷ ஆட்டத்தில் குதித்தனர். இதற்குப் பலன் கிடைத்தது.
3வது கால் மணி நேர ஆட்டத்தில் ராணி ராம்பால் இந்தியாவின் முதல் கோலை அடித்தார். அடுத்த சில நிமிடங்களில் லீலிமா மின்ஸ் 2வது கோலை அபாரமாக அடித்து அசத்தினார். இதனால் 3வது கால் மணி நேர ஆட்ட இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் போட்டி சம நிலையில் இருந்தது. கடைசி வரை இரு தரப்பும் மேலும் கோல்கள் போடாத காரணத்தால் போட்டி டிராவில் முடிந்தது.
ஜப்பானை கடந்த 3 வெவ்வேறு போட்டிகளில் இந்தியா எளிதாக தோற்கடித்துள்ள போதிலும் இன்றைய ஆட்டத்தில் ரொம்பவே திணறியது உண்மை.