ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை 0-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வீழ்த்தியது.
இந்திய மகளிர் ஹாக்கி அணி 1980 க்கு பிறகு ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. கேப்டன் சுசீலா சானு தலைமையிலான மகளிர் ஹாக்கி அணியினர் முதல் லீக் போட்டியில் ஜப்பானுடன் மோதியது. அந்த போட்டியில் கடுமையாக போராடி 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது இந்தியா.
இந்நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இன்று மோதின. முதல் கால் மணி நேர ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்தனர். ஆனால் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இரண்டாவது கால் பகுதி ஆட்டத்தில் பிரிட்டன் அணி பெனால்ட்டி கானரை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தது. பின்னர் அடுத்த 3 நிமிடத்தில் நிகோலா ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து இந்திய வீராங்கனைகள் கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தனர்.
இதனையடுத்து மூன்றாவது கால் மணி நேரத்தில் இரு அணி வீராங்களைகளும் கடுமையாக மோதினர். மூன்றாம் பகுதி தொடக்கத்திலேயே பிரிட்டன் அணி தனது மூன்றாவது கோலை பதிவு செய்தது. ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இங்கிலாந்து அணி, இந்தியா அணியை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.