பெங்களூரு: இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்த நெதர்லாந்தின் ஜோயர்டு மரிஜ்னே, மீண்டும் மகளிர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் அணியின் பயிற்சியாளராக இருந்த ஹரேந்திர சிங், ஆடவர் அணியின் கோச்சாகி உள்ளார்.
இந்திய ஹாக்கி அணியின் கோச்சாக இருந்த ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் கடந்தாண்டு நவம்பரில் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக மகளிர் அணியின் கோச்சாக இருந்த நெதர்லாந்தின் ஜோயர்டு மரிஜ்னே ஆடவர் அணியின் கோச்சாக நியமிக்கப்பட்டார். அப்போது மகளிர் அணியின் கோச்சாக ஹரேந்திர சிங் நியமிக்கப்பட்டார்.

மரிஜ்னே கோச்சாக இருந்தபோதுதான் இந்திய மகளிர் அணி மிகவும் வலுவானதாக உருமாறியது. உலக ஹாக்கி லீக் அரை இறுதிக்கு முன்னேறியது. அதையடுத்தே அவர் ஆடவர் அணியின் கோச்சாக நியமிக்கப்பட்டார்.
[Read This: கண்ணாடிய திருப்பினா வண்டி எப்படி ஓடும்.... ஓடும் என்கிறது ஹாக்கி கூட்டமைப்பு! ]
ஆனால், இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து ஆடவர் ஹாக்கி அணி சரியாக செயல்படவில்லை. சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையை கோட்டைவிட்ட ஹாக்கி அணி, காமன்வெல்த் போட்டியிலும் சொதப்பியது. காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று வரும் என்று நினைத்த ஹாக்கி அணி, நான்காவது இடத்தையே பிடித்தது. முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் இந்திய ஹாக்கி அணிக்கு பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை.
அடுத்ததாக சாம்பியன்ஸ் கோப்பை, ஆசியக் கோப்பை மற்றும் இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடக்க உள்ளன. அதையடுத்து அணியை வலுப்படுத்துவதற்காக புதிய கோச்சை நியமிப்பது குறி்தது விவாதிக்கப்பட்டு வந்தது.
மரிஜ்னே உருவாக்கிய அணியை மேலும் வலுப்படுத்திய மகளிர் அணியின் கோச் ஹரேந்திர சிங், ஆடவர் அணியின் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார். மரிஜ்னே மீண்டும் மகளிர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், கடந்த, 23 ஆண்டுகளில் இந்திய ஆடவர் அணிக்கு 25வது முறையாக பயிற்சியாளர் மாற்றப்பட்டுள்ளார்.
ஹரேந்திர சிங், ஆடவர் அணிக்கு, 2009 முதல் 2011 வரை ஏற்கனவே பயிற்சியாளராக இருந்துள்ளார்.