அஹ்மதாபாத் : 2019 புரோ கபடி லீக் தொடரில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தியது ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி. மற்றொரு போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணி, குஜராத்தை வீழ்த்தியது.
இந்த சீசனில் ஹரியானா அணி, பெங்களூருவை வீழ்த்தி தன் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. அதே போல, தெலுகு அணி தன் முதல் வெற்றியை கண்டது.
ஹரியானா அணிக்கு விகாஷ் கொண்டாலா அபாரமாக செயல்பட்டு ரெய்டு புள்ளிகளை அள்ளிக் கொடுத்தார். தன் இரண்டாவது போட்டியில் இரண்டாவது சூப்பர் 10 ரெய்டை எட்டி அசத்தினார்.
பெங்களூரு புல்ஸ் அணியின் பவன் செஹ்ராவத் மற்றும் ரோஹித் குமார் சிறப்பான துவக்கம் அளித்தும் அந்த அணி தோல்வி அடைந்தது. முதல் பாதியில் பெங்களூரு அணி 17 - 16 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
கடைசி நிமிடத்தில் இரு அணிகளும் சமமான புள்ளிகளில் இருந்தன. அப்போது பவன் செஹ்ராவத் ரெய்டு செய்ய வந்த போது டேக்கில் செய்தார் தர்மராஜ். அடுத்து இரு அணிகளும் மாற்றி, மாற்றி நடத்திய விரைவான ரெய்டுகளில் ஹரியானா 3 புள்ளிகள் கூடுதலாக பெற்றது. போட்டியின் முடிவில் 33 - 30 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது ஹரியானா.
மற்றொரு போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணி 16 டேக்கில் புள்ளிகள் பெற்று அசத்தி, அதை வைத்தே குஜராத் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின் முதல் பாதியிலேயே தெலுகு அணி 17 - 13 என புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியிலும் ஆதிக்கம் செலுத்தியது. குஜராத் அணியின் ரெய்டுகள் தொடர்ந்து தோல்வி அடையவே, தெலுகு அணி 30 - 24 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று, இந்த சீசனில் தன் முதல் வெற்றியை பதிவு செய்தது.