டெல்லி : பெங்களூரு புல்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.
2019 புரோ கபடி லீக் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் - ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின.
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. அந்த அணியின் பலம் தடுப்பாட்டம் தான். அதே போல, பெங்களூரு புல்ஸ் அணியின் பலம் ரெய்டுகளில் புள்ளிகளை அள்ளுவது தான்.
இதனால் இந்த இரு அணிகளில் வெற்றி பெறப் போவது யார் என்ற பரபரப்பு நிலவியது. பெங்களூரு புல்ஸ் அணி துவக்கம் முதலே ரெய்டு மற்றும் டேக்கில் செய்வதில் முன்னிலையில் இருந்தது.
ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் ஜெய்ப்பூர் அணியை ஆல் அவுட் செய்து மிரட்டியது. முதல் பாதியின் முடிவில் 22 - 8 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக முன்னிலையில் இருந்தது.
அதன் பின் இரண்டாம் பாதியில் ஜெய்ப்பூர் அணி சிறிது நேரம் போராடியது. பெங்களூரு அணியை ஒரு முறை ஆல் அவுட் செய்தும் அந்த அணியால் முன்னிலை பெற முடியவில்லை. இறுதியில் மீண்டும் ஒரு முறை ஜெய்ப்பூர் அணியை ஆல் அவுட் செய்தது பெங்களூரு.
ஆட்ட நேர முடிவில் பெங்களூரு அணி 41 - 30 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் ரோஹித் குமார் 13 ரெய்டு புள்ளிகள் பெற்றார். டிஃபண்டர்களான மகேந்தர் சிங், சௌரப் நண்டால், மொஹிட் செஹ்ராவத் ஆகியோர் தலா 5 டேக்கில் புள்ளிகள் பெற்றனர்.
புரோ கபடி லீக் வரலாற்றில் ஒரே அணியை சேர்ந்த மூவர் 5 டேக்கில் புள்ளிகள் பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.