பெங்களூரு : தமிழ் தலைவாஸ் அணி புரோ கபடி லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து, தன் தோல்விப் பயணத்தை தொடர்ந்து வருகிறது.
தமிழ் தலைவாஸ் அணி அனுபவம் வாய்ந்த வீரர்கள் கொண்ட அணி என்றாலும், பெங்களூரு அணியிடம் 33 - 27 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்தது.
பவன் செஹ்ராவத் 17 புள்ளிகள் அள்ளி, தமிழ் தலைவாஸ் அணியை நொறுக்கினார். முதல் பாதியில் இரு அணிகளும் சமமாக போட்டிபோட்டு ஆடின. 14 - 13 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு அணி வெறும் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தான் முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியில் பெங்களூரு அணியின் ரெய்டர் பவன் செஹ்ராவத் மற்றும் டிஃபண்டர் அமித் ஷேரான் சிறப்பாக செயல்பட்டு தமிழ் தலைவாஸ் அணியை பின் தங்க வைத்தனர்.
போட்டி முடிவில் 33 - 27 என்ற புள்ளிக் கணக்கில், ஆறு புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்களூரு புல்ஸ் அணி வெற்றி பெற்றது.
ரெய்டுகளில் பெங்களூரு அணி 22 புள்ளிகளும், தமிழ் தலைவாஸ் 14 புள்ளிகளும் பெற்றன. இது தான் தமிழ் தலைவாஸ் அணியின் மோசமான தோல்விக்கு முக்கிய காரணம்.
கடந்த நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள தமிழ் தலைவாஸ், அதற்கு முந்தைய போட்டியில் டை செய்து இருந்தது. ஒட்டு மொத்தமாக தோல்விப் பாதையில் இருக்கும் அந்த அணி அடுத்து வரும் போட்டிகளில் மீண்டாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாத நிலையில் உள்ளது.