பெங்களூரு : 2019 புரோ கபடி லீக் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி தெலுகு டைட்டன்ஸ் அணியையும், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி பெங்களூரு புல்ஸ் அணியையும் வீழ்த்தின.
புரோ கபடி லீக் தொடரின் 120வது போட்டியில் ஜெய்ப்பூர் - பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஜெய்ப்பூர் அணியின் தீபக் நார்வால் 16 ரெய்டு புள்ளிகள் குவித்து அணியை பெறச் செய்தார். பெங்களூரு அணியின் பவன் செஹ்ராவத் 10 ரெய்டு புள்ளிகள் மட்டுமே எடுத்தார்.
முதல் பாதியில் 20 - 18 என்ற அளவில் முன்னிலையில் இருந்த ஜெய்ப்பூர் அணி ஆட்ட நேர இறுதியில், 41 - 34 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.
லீக் சுற்றின் 121வது போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் - தெலுகு டைட்டன்ஸ் அணிகள் மோதின, இந்தப் போட்டியில் ஹரியானா அணியின் விகாஸ் கொண்டோலா 13 ரெய்டு புள்ளிகளும், ரவி குமார் 7 டேக்கில் புள்ளிகளும் பெற்று, அந்த அணியை வெற்றி பெற வைத்தனர். முதல் பாதியிலேயே பெரிய முன்னிலையை பெற்றது ஹரியானா.
முதல் பாதி முடிவில் ஹரியானா அணி 30 - 12 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. ஆட்ட நேர முடிவில் 52 - 32 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்தது.
முன்னதாக நடந்த லீக் போட்டியில் புனேரி பல்தான் அணியிடம் தெலுகு டைட்டன்ஸ் அணி 50 - 53 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி அடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.