எலிமினேட்டர்
லீக் சுற்று முடிவில் விளையாடிய 22 போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 10 ஆட்டங்களில் வென்று, 8 ஆட்டத்தில் தோற்று மற்றும் 4 போட்டிகளில் டை ஆகி, புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் நிறைவு செய்தது. இதன் மூலம் தமிழ் தலைவாஸ் அணி முதல் முறையாக பிளே ஆப்பில் களமிறங்கி எலிமினேட்டர் ஆட்டத்தில் இன்று உத்தரப் பிரதேச அணியுடன் விளையாடியது.
ஆதிக்கம்
ஆட்டம் தொடங்கிய தில் இருந்தே தமிழ் தலைவாஸ் அணி ஆதிக்கம் செலுத்தி புள்ளிகளை குவித்தது. தமிழ் தலைவாஸ் 4 புள்ளிகளை பெற்ற பிறகு தான் உபி அணி முதல் புள்ளியே பெற்றது. இந்த நிலையில், உபி அணியின் சுரேந்தர் கில் உள்ளிட்ட வீரர்கள் தங்களது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி ரெயிட் சென்று புள்ளிகளை அள்ளினர்.
சமனில் முடிந்தது
எனினும் தமிழ் தலைவாஸ்அணியே முன்னிலையில் இருந்த நிலையில், தேவையில்லாமல் ரெய்டு வந்த உபி வீரர்களை பிடிக்க முற்பட்டு, புள்ளிகளை இழந்தது. விறுவிறுப்பான கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை ஆல் அவுட் செய்து, இதன் காரணமாக உபி அணி ஆட்டத்தின் கடைசி நேரத்தில் முன்னிலை பெற்றது. எனினும், போனஸ் புள்ளிகளை முக்கிய கட்டத்தில் குறிவைத்து பெற, ஆட்டத்தின் திருப்புமுனையாக ரெய்ட் வந்த உபி வீரரை தமிழ் தலைவாஸ் வீரர்கள் சிறைப் பிடிக்க போட்டி 36 க்கு3 6 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.
சூப்பர் ரெய்டு
இதனையடுத்து, வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ரெய்டு கடைபிடிக்கப்பட்டது. இதில், ஒவ்வொரு அணிக்கும் 5 ரெய்டுகள் வழங்கப்படும். இதில் தமிழ் தலைவாஸ் அணி சிறப்பாக செயல்பட்டு, ரைடு வந்த உபி வீரர்களை அமுக்கி பிடித்து, புள்ளிகளை பெற்றனர்.
அரையிறுதிக்கு தகுதி
இதன் மூலம் 6க்கு4 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்று, புரோ கபடி லீக் தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. 13 புள்ளிகளை பெற்ற தமிழ் தலைவாஸ் அணி வீரர் நரேந்தர் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதனையடுத்து வரும் 15ஆம் தேதி அரையிறுதி ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி புனே உடன் மோதுகிறது.