காமன்வெல்த்: இந்தியாவுக்கு 3வது தங்கம்.. பளுதூக்குதலில் மிரள வைத்த 20 வயது வீரர் - பதக்கப்பட்டியல்
பிரிமிங்கம்: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கப்பதக்கத்தை வென்றுக்கொடுத்து அசத்தியுள்ளார் அசிந்தா ஷுயுலி.
காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தின் பிர்மிங்கம் நகரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் நாளில் பதக்கம் வெல்லாமல் இருந்த இந்தியா, 2வது நாளில் இருந்து தங்கம், வெள்ளி என பதக்க வேட்டை நடத்தி வருகிறது.

ஆட்டத்தின் 3வது நாளின் போது இந்தியாவுக்கு 3வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்களுக்கான 67 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் சார்பில் அசிந்தா ஷுயுலி களமிறங்கினார். 20 வயதே ஆகும் இவர் ஸ்நாட்ச் சுற்றில் 140 கிலோ மற்றும் 143 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்தார். இதே போன்று க்ளீன் & ஜெர்க் சுற்றில் 166கி, 170 கிலோ என தூக்கி அசத்தினார். இதன்மூலம் அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

முன்னதாக 19 வயதே ஆகும் ஜெரிமிலால் ரிங் குங்கா இந்தியாவின் 2வது தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார். இவர் ஸ்னாட்ச் பிரிவில் 140 கிலோ எடையை தூக்கி அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தார். இதே போல க்ளீன் & ஜெர்க் சுற்றில் 160 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஜெரிமிலாலுக்கு காயம் ஏற்படும் சூழலில் இந்த பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா அட்டகாசமான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. தற்போது வரை பதக்க பட்டியலில் இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தமாக 6 பதக்கங்களுடன் 6வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 52 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியாவும், 2வது இடத்தில் 34 பதக்கங்களுடன் இங்கிலாந்தும் உள்ளன.


Click it and Unblock the Notifications