சென்னை : செஸ் விளையாட்டில் தலைநகரமாக இந்தியாவிற்கு தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியாவில் இதுவரை 83 பேர் செஸ் கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். இதில் 29 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது நமக்கு எல்லாம் ஒரு பெருமை.
ஆனால் இதில் கவனிக்கத்தக்க விஷயம் ஒன்று இருக்கிறது. தமிழகத்தில் உருவான 15 கிராண்ட் மாஸ்டர்கள் ஒரே பள்ளியில் படித்து வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் இருந்துதான் 15 கிராண்ட் மாஸ்டர் உருவாகி இருக்கிறார்கள். தற்போது செஸ் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் தமிழக வீரர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா ஆகியோர் இதே பள்ளியில் படித்து செஸ் பயிற்சியை பெற்றவர்கள். வேலம்மாள் பள்ளியில் சுமார் ஆயிரம் பேர் ஆண்டுதோறும் செஸ் பயிற்சியை பெறுகிறார்கள். இதற்காக ஆண்டுக்கு 2000 ரூபாய் அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் பள்ளிகளுக்கான உலக அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து ஐந்து முறை வேலம்மாள் பள்ளி மாணவர்கள் வென்று இருக்கிறார்கள்.இதனால் இந்தப் பள்ளி நிர்வாகமே செஸ் போட்டியில் சிறந்து விளங்கும் ஐந்து மாணவர்களுக்கு அனைத்து செலவுகளையும் பார்த்துக் கொள்கிறது. மேலும் பள்ளியில் செஸ் போட்டியில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு மூன்று வகுப்புகள் நடத்தப்படுகிறது.இதற்காக வெளியில் இருந்து செஸ் பயிற்சியாளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள்.
மேலும் படிப்பு, தேர்வால் விளையாட்டு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு தேர்வை பிறகு எழுதிக் கொள்ள வசதியும் செய்து தரப்படுகிறது. இதன் மூலம் செஸ் மீது ஆர்வம் உள்ள மாணவர்கள் அனைவரும் தேடிச்செல்லும் இடமாக இந்த பள்ளி மாறி இருக்கிறது. தற்போது பிரக்ஞானந்தாவை போலவே வேலவன், ரோஹித், அஸ்வத், ஹர்ஷ்,தக்ஷின், தேஜஸ்வினி போன்ற இளம் செஸ் வீரர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.
செஸ் போட்டியில் சிறந்து விளங்குவதன் மூலம் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரியிலும் இடம் கிடைக்கிறது. இதனால் பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை செஸ் விளையாட்டை எடுத்துக் கொள்ள ஊக்குவிக்கிறார்கள். வேலம்மாள் போன்ற தனியார் பள்ளி இதனை செய்ய முடிகிறது என்றால் ஏன் அரசு பள்ளி மற்றும் மற்ற தனியார் பள்ளிகளிலும் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தாமல் மாணவர்களுக்கு விளையாட்டையும் சொல்லிக் கொடுக்க முடியாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.