பங்குச் சந்தைகள் வீழ்ச்சி
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் மோசமாக வீழ்ந்து வருகின்றன. அதிலும், இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸ் மற்றும் நிப்டி கடந்த இரு தினங்களாக 8 முதல் 10 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்து அதிர்ச்சி அளித்துள்ளது.
பொருளாதாரம் வீழ்கிறது
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஏற்படும் பாதிப்பை விட பொருளாதாரம் வேகமாக வீழ்ந்து வருகிறது. பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், விளையாட்டுத் துறை மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. போட்டிகளை நடத்த முடியாமல் ஸ்தம்பித்து போய் உள்ளது.
விளையாட்டுத் தொடர்கள் ரத்து
வீரர்கள் மற்றும் ரசிகர்களின் உடல்நலன் ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதால் பல விளையாட்டுத் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏடிபி டென்னிஸ் தொடர் அடுத்த ஆறு வாரங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
கோல்ப் தொடர் நிறுத்தம்
அமெரிக்காவின் பல விளையாட்டுத் தொடர்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. பிஜிஏ எனப்படும் பிரபல கோல்ப் தொடர் ஏப்ரல் 5 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எம்எல்எஸ் எனப்படும் கால்பந்து தொடரும் தற்காலிக தடையை சந்தித்துள்ளது.
அமெரிக்க தொடர்கள்
என்எச்எல் எனப்படும் தேசிய ஹாக்கி லீக், என்பிஏ எனப்படும் கூடைப்பந்து தொடர், என்எப்எல் எனப்படும் ரக்பி தொடர் ஆகியவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கூடைப்பந்து வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அமெரிக்காவின் பல விளையாட்டுத் தொடர்கள் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து நிலை
அதே போல, ஐரோப்பிய கண்டம் மற்றும் தென் அமெரிக்க கண்டத்தின் முக்கிய விளையாட்டான கால்பந்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வருடம் முழுவதும் இந்த பகுதிகளில் கால்பந்து தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும்.
வீரர்களுக்கு கொரோனா
இந்த நிலையில் கொரோனா வைரஸ் இத்தாலியின் சீரி ஏ, ஐரோப்பியாவின் பிரபல கால்பந்து தொடர்கள் லா லீகா மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரும் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டு சீரி ஏ தொடர் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி ஆகி இருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யூரோ லீக் நடக்குமா?
ஐரோப்பாவில் அடுத்த மாதங்களில் நடைபெற உள்ள யூரோ லீக் உள்ளிட்ட சில தொடர்களும் நடக்குமா? என்ற கேள்விக் குறியுடன் தான் உள்ளது. முதலில் சில கால்பந்து போட்டிகள் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடந்தது.
பெரும் பாதிப்பு
ஆனால், தற்போது அதற்கும் வழி இல்லை. வீரர்களின் உடல்நலன் குறித்த அச்சம் எழுந்துள்ளது. அதனால், ஐரோப்பா முழுவதும் பணத்தை கொட்டும் அத்தனை கால்பந்து தொடர்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இது மிகப் பெரும் பாதிப்பாக பார்க்கப்படுகிறது.
ஐஎஸ்எல் இறுதிப் போட்டி
இந்தியாவில் பல சிறு விளையாட்டுத் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி மட்டுமே மீதமுள்ளது. அந்த இறுதிப் போட்டியை ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் நிலை
இந்தியாவின் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் நடக்குமா? என்றே தெரியவில்லை. இந்தியா - தென்னாப்பிரிக்கா தொடர் நடத்த வேண்டாம் என பலர் கூறி வரும் நிலையில் அந்த தொடர் ரசிகர்கள் இல்லாமல் நடைபெற உள்ளது.
பிசிசிஐ பிடிவாதம்
ஐபிஎல் தொடரையும் அப்படி நடத்த பிசிசிஐ பிடிவாதம் பிடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால், அப்படி நடந்தாலும் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி உள்ளது. இந்த நிலையில், பிசிசிஐ கூட்டம் மார்ச் 14 அன்று நடைபெற உள்ளது.