
2வது இந்தியர்
ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதல் பிரிவில் 12 வீரர்கள் பங்கேற்ற இறுதிச்சுற்று, 6 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில், தனது முதல் சுற்றில் 87. 03 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி நீரஜ் சோப்ரா, 2வது சுற்றில் 87.58 மீ தூரம் வீசி அசர வைத்தார். இவரது 87.58 மீட்டர் என்ற தூரத்தை எந்த ஒரு வீரராலும் தகர்க்க முடியவில்லை. இதனால் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கமாகும். இதற்கு முன்னர் பி.வி.சிந்து, மீராபாய் சானு, ரவிக்குமார் தஹியா உள்ளிட்டோர் 6 பதக்கங்களை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தனர். இதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக்கில் தனி நபர் ஆட்டத்தில் தங்கப்பதக்கம் வெல்லும் 2வது இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார்.

தீர்த்து வைத்த நீரஜ்
இதற்கு முன்னர் கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார். ஒலிம்பிக் தொடரில் இந்தியா கடந்த 1920ம் ஆண்டு முதல் பங்கேற்று வருகிறது. பல்வேறு போட்டிகளிலும் இந்தியா பதக்கங்களை வென்று வந்தாலும், தடகளப்போட்டியில் மட்டும் இதுவரை ஒரு பதக்கத்தை கூட வென்றதில்லை. கடந்த 1960ம் ஆண்டு மில்கா சிங், 1984ம் ஆண்டு பி.டி.உஷா ஆகியோரால் கூட பதக்கம் வென்று கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் பதக்கத்திற்காக 100 ஆண்டுகளாக காத்திருந்த இந்தியாவின் ஏக்கத்தை நீரஜ் சோப்ரா இந்த ஒலிம்பிக்கில் போக்கினார்.

சென்சேஷன்
இந்நிலையில், வரும் 24ம் தேதி அதே டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. நீரஜ் தங்கம் வெல்வதற்கு முன்பு வரை, ஈட்டி எறிதல் போட்டிகள் இந்தியாவில் பெரியளவில் கவனிக்கப்படாமல், இருந்தன. ஆனால் அவர் தங்கம் வென்ற அந்த நொடியில் இருந்து ஈட்டி எறிதல் விளையாட்டு இந்தியாவின் சென்சேஷன் ஆனது. தேசமே இதை கொண்டாடியது. லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஈட்டி எறிதல் பிரிவின் மேல் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த ஈட்டி எறிதல் போட்டியில், இதே நமது இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றும் கவனிக்கப்படாமல் தான் இருக்கிறார். எதிர்வரும் ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்ல அவர் முனைப்போடு காத்திருக்கிறார்.

இரண்டு தங்கம்
ஆம்! அவர் தேவேந்திர ஹஜ்ஹாரியா. இடது கையை இழந்த ஒரு மாற்றுத்திறனாளி. 2004ம் ஏதென்ஸில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில், ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம் வென்றுக் கொடுத்த வீரர் இவர். அதுமட்டுமின்றி, 2016ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் அவர் தங்கம் வென்று அசத்தினார். ஆனால், அப்போதும் அவர் கவனிக்கப்படவில்லை. இப்போது, அதே ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற பிறகு, இந்த விளையாட்டின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வம் குறித்தும், மூன்றாவது தங்கம் வெல்வது குறித்து ஹாஜ்ஹாரியா மனம் திறந்து பேசியுள்ளார்.

மிகப்பெரிய களம்
இதுகுறித்து அவர், "2004 ல் நான் உலக சாதனையுடன் தங்கம் வென்றபோது, அந்த நேரத்தில் ஈட்டி எறிதல் விளையாட்டு பற்றி மக்களுக்கு என்னவென்றே தெரியாது என்பதால் அது கிட்டத்தட்ட கவனிக்கப்படாமல் போனது. ரியோ விளையாட்டுகளுக்குப் பிறகு ஓரளவுக்கு கவனிக்கப்பட்டேன். நான் இரண்டாவது தங்கம் வென்றதற்காக கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இப்போது நீரஜ் தங்கம் வென்றுள்ளதால், எல்லோரும் திடீரென்று ஈட்டி எறிதல் பற்றி பேசுகிறார்கள். இப்போது இந்த விளையாட்டுக்கு அங்கீகாரம் கிடைக்கும் நேரம் வந்துவிட்டது. நீரஜின் ஒலிம்பிக் தங்கத்திற்குப் பிறகு, எல்லோரும் நான் மூன்றாவதாக பாராலிம்பிக் தங்கம் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். இந்த முறை நிறைய பரபரப்பும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. எனக்கு இப்போது 19 வருட அனுபவம் உள்ளதால் நான் எதிர்பார்ப்பை அழுத்தமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பாராலிம்பிக்ஸ் மிகப்பெரிய களமாகும். உலகின் சிறந்த பாரா விளையாட்டு வீரர்கள் இருப்பார்கள் என்பதால் நான் போட்டியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டேன். என்னால் முடிந்த அளவு முயற்சி செய்வேன் உலக சாதனையுடன் தங்கம் வெல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.

17 பதக்கங்கள் கிடைக்கலாம்
மேலும் அவர், "இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் நாம் எதிர்பார்ப்பதை விட அதிகமான பதக்கங்களை வெல்வோம் என்று என்னால் சொல்ல முடியும். இந்த முறை சுமார் 15 முதல் 17 பதக்கங்களை வெல்ல முடியும் என்று நினைக்கிறேன். நான் 7 கிலோ எடை குறித்து உடல் நலத்துடன் இருக்கிறேன். நிச்சயம் மெடல் வெல்வேன்" என்றார். ஒன்பது விளையாட்டு பிரிவுகளில் போட்டியிட 54 பாரா விளையாட்டு வீரர்களுடன் இந்தியா தனது மிகப்பெரிய குழுவை டோக்கியோவுக்கு அனுப்புகிறது. இதற்கு முன் பாராலிம்பிக்கிற்கான இந்தியாவின் மிகப் பெரிய அணி ரியோ 2016 -ல் அனுப்பப்பட்டது. 19 விளையாட்டு வீரர்கள் ஐந்து விளையாட்டுகளில் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினர். அதில், இரண்டு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கங்களுடன் இந்தியாவின் மிகச்சிறந்த பதக்க வேட்டையாக ரியோ ஒலிம்பிக் முடிந்தது. இம்முறை 54 வீரர்கள் செல்வதால் நிச்சயம் நிறைய மெடல் கைப்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











