டோக்கியோ : கொரோனா வைரஸுக்கு முதல் சுமோ மல்யுத்த வீரர் பலியாகி உள்ளார்.
ஜப்பானின் பாரம்பரிய மல்யுத்த விளையாட்டான சுமோ, கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஐந்து வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதில் ஒருவர் தான் இப்போது உயிரிழந்துள்ளார். பலியான சுமோ வீரரின் பெயர் ஷோபுஷி என்பதாகும். அவரது வயது 28 மட்டுமே. அவர் மூன்றாம் நிலை சுமோ வீரர் ஆவார்.
அவருக்கு கடந்த மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் 8ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏப்ரல் 19 அன்று தீவிர சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டார். பின்னர் அவரது உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்கத் துவங்கின. பல உறுப்புகளும் செயலிழந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
நல்ல உடல் உறுதி கொண்ட இளம் மல்யுத்த வீரர் ஒருவர் பலியாகி இருப்பது ஜப்பானில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
முதலில் கொரோனா வைரஸ் பரவலுக்கு நடுவே சுமோ வீரர்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஐந்து வீரர்கள் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் தான் பலியாகி உள்ளார்.
மார்ச் மாதம் ஒரு சுமோ தொடர் ரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் நடைபெற்றது. அடுத்ததாக மே மாதம் 24 முதல் ஜூன் 7 வரை ஒரு சுமோ தொடர் நடப்பதாக இருந்தது. தற்போது ஜப்பானில் தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதால் அந்த தொடரை ரத்து செய்துள்ளது ஜப்பான் சுமோ அமைப்பு.