அகமதாபாத்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியிலும் வெல்லும் ஆயத்தத்துடன் இந்திய அணி இன்று அகமதாபாத்தில் களம் இறங்கியுள்ளது.இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் இரு போட்டிகளிலும் வென்று இந்தியா தொடரைக் கைப்பற்றி விட்டது. முதல் போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா, 2வது போட்டியில் சச்சினின் உலக சாதனையுடன் 153 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.இந்த நிலையில் அகமதாபாத்தில் இன்று 3வது போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.இன்றைய போட்டியிலும் வெல்ல இந்தியா உறுதியாக உள்ளதாக இந்திய அணியின் பயிற்சியாளரான கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.இன்றைய போட்டியில், சச்சின் டெண்டுல்கருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக வீரர் முரளி விஜய் கிருஷ்ணா, விராத் கோலி, திணேஷ் கார்த்திக், ரோஹித் சர்மா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். டோணியைத் தவிர மற்ற அனைவருமே கிட்டத்தட்ட நிரூபிக்கத் துடிக்கும் இளைஞர்கள், புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இன்றைய போட்டியில் இந்தியா சார்பில் தமிழக வீரர்களான திணேஷ் கார்த்திக்கும், முரளி விஜய்யும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்குவார்கள்.