லண்டன்: 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக, அகமதாபாத் நகரை முன்மொழிந்து இந்திய அரசு அதிகாரப்பூர்வ விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. குஜராத் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) தலைவர் பி.டி. உஷா ஆகியோர் அடங்கிய இந்தியக் குழு, லண்டனில் உள்ள காமன்வெல்த் விளையாட்டு மதிப்பீட்டுக் குழுவிடம் இந்தத் திட்டத்தை நேற்று (செப்டம்பர் 23, 2025) அதிகாரப்பூர்வமாகச் சமர்ப்பித்தது.
2030 ஆம் ஆண்டுடன் காமன்வெல்த் விளையாட்டு இயக்கம் நூறு ஆண்டுகளை நிறைவு செய்வதால், இந்த நூற்றாண்டு பதிப்பை நடத்தும் பெருமைக்குரிய மைல்கல்லாக இது அமையும் என்று குஜராத் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அரங்குகள், வலுவான போக்குவரத்து அமைப்புகள் மற்றும் உயர்தர தங்குமிட வசதிகள் என அனைத்தும் அகமதாபாத்தில் இருப்பதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த செலவு, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, நிலைத்தன்மை மற்றும் பாரா-விளையாட்டுகளின் ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு இந்தத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அந்த திட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ஹர்ஷ் சங்கவி பேசுகையில், "நூற்றாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை அகமதாபாத்தில் நடத்துவது குஜராத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஒரு பெருமையான மைல்கல்லாக அமையும். இந்த விளையாட்டுப் போட்டிகளை, நமது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கவும், 'வளர்ந்த பாரதம் 2047' நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தவும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு காமன்வெல்த் இயக்கத்தை வலுப்படுத்தவும் ஒரு உந்து சக்தியாக நாங்கள் பார்க்கிறோம்" என்றார்.
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா பேசுகையில், "இந்தியாவின் இந்த முயற்சி, விளையாட்டுத் திறனைப் பற்றியது மட்டுமல்ல, மதிப்புகளைப் பற்றியதும் கூட. 2026 கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளுக்குப் பிறகு, அந்தப் பொறுப்பை ஏற்க அகமதாபாத் தயாராக உள்ளது. காமன்வெல்த் விளையாட்டின் கடந்த காலத்தைக் கவுரவித்து, எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் இந்த நூற்றாண்டுப் பதிப்பு அமையும்" என்றார்.
முன்னதாக, இந்தத் திட்டத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது. 2010 ஆம் ஆண்டு டெல்லியில் காமன்வெல்த் போட்டிகளை இந்தியா வெற்றிகரமாக நடத்திய நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் பிரம்மாண்ட விளையாட்டு விழாவை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.