அகமதாபாத்: விளையாட்டு உலகில் இந்தியா அசுர வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், 2030-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்தப் போட்டிகள் நடைபெறவுள்ளன. காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக, இந்த நூற்றாண்டு விழாப் போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவது சிறப்புக்குரியது.
இந்தியா காமன்வெல்த் போட்டிகளை நடத்துவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் இந்தியா எப்போது போட்டியை நடத்தியது? அதில் இந்தியாவின் செயல்பாடு எப்படி இருந்தது? என்பதைப் பற்றிய ஒரு 'பிளாஷ்பேக்' இதோ.

கடைசியாக 2010-ம் ஆண்டு இந்தியா காமன்வெல்த் போட்டிகளை நடத்தியது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற அந்தப் போட்டித் தொடர், இந்தியா நடத்திய முதல் காமன்வெல்த் போட்டியாகும். ஆசியாக் கண்டத்தில் இந்தப் போட்டி நடந்தது அதுவே இரண்டாவது முறை.
2010 அக்டோபர் 3-ம் தேதி முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை டெல்லியில் கோலாகலமாக நடைபெற்ற இந்தத் திருவிழாவில், 71 காமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் 17 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர்.
2010 டெல்லி காமன்வெல்த் போட்டி இந்தியாவுக்கு ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். சொந்த மண்ணில் நடைபெற்றதால், இந்திய வீரர்கள் வெறித்தனமாகப் போராடிப் பதக்கங்களைக் குவித்தனர். இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச பதக்கங்களை வென்று சாதனை படைத்தது அந்த ஆண்டில்தான்.
மொத்தம் 101 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பிடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது இந்தியா.
குறிப்பாகத் துப்பாக்கிச் சுடுதல் (Shooting) போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதிலிருந்து மட்டும் இந்தியாவுக்கு 30 பதக்கங்கள் கிடைத்தன. அதில் 14 தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல மல்யுத்தப் போட்டியில் பங்கேற்ற 21 இந்திய வீரர்களில், 19 பேர் பதக்கம் வென்று அசத்தினர் (10 தங்கம்). பளுதூக்குதல் மற்றும் குத்துச்சண்டை போட்டிகளிலும் இந்தியா முத்திரை பதித்தது.
பொதுவாகக் காமன்வெல்த் போட்டிகளில் தடகளம், நீர் விளையாட்டுக்கள், குழுப் போட்டிகள் எனப் பல வகைகள் இருக்கும். 2010 டெல்லி போட்டியில் பேட்மிண்டன், குத்துச்சண்டை, ஹாக்கி, ஜிம்னாஸ்டிக்ஸ், துப்பாக்கிச் சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம் உள்ளிட்ட 17 விளையாட்டுகள் இடம்பெற்றன.
தற்போது 2030-ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெறவுள்ள போட்டிகள், இந்தியாவின் விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியைப் பறைசாற்றுவதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.