பெங்களூர்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடருக்கான 14 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இங்கு 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டி20, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. மே.தீவுகளுக்கு எதிரான முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி பெங்களூரில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சமீபகாலமாக பந்து வீச்சில் சொதப்பி வரும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கழற்றி விடப்பட்டு அவருக்கு பதிலாக சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டித் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி கலக்கி வரும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அனுபவமிக்க ஸ்பின்னர் தேவையை ஈடு செய்ய அமித் மிஸ்ராவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழக வீரர் முரளி விஜய்க்கு மீண்டும் இடம் கிடைத்துள்ளது.
இந்திய அணி விவரம்: டோணி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷிக்கர் தவான், அஜிங்யா ரகானே, விராட் கோஹ்லி, ரெய்னா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, மோகித் ஷர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குல்தீப் யாதவ்.