ஒலிம்பிக் போட்டிகள் 2020
சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 14,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில், ஏறக்குறைய அனைத்து போட்டிகளும் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வரும் ஜூலை 24ம் தேதி முதல் திட்டமிடப்பட்டுள்ள ஒலிம்பிக் போட்டிகளையும் தள்ளிவைக்க சர்வதேச அளவில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக் கமிட்டி பிடிவாதம்
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்ட போதிலும் ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் அதுகுறித்து தற்போது யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்திருந்தது.
இறங்கி வந்த ஒலிம்பிக் கமிட்டி
இதனிடையே ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது குறித்த முடிவு 4 வார காலத்திற்குள் எடுக்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் தாமஸ் பேச் கூறுகையில், ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயம் என்றும் ஒரு கால்பந்தாட்ட போட்டியை அடுத்த இடத்திற்கு மாற்றுவது போல எளிதானது அல்ல என்றும் கூறியுள்ளார்.
கனடா ஒலிம்பிக் கமிட்டி திட்டவட்டம்
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தப்பட்டாலும், தன்னுடைய வீரர்களை அனுப்ப முடியாது என்று கனடா ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் கமிட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் என்றும் கூறியுள்ளது. இதனிடையே, ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டியும், 2021க்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகுமாறு வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
நாடாளுமன்றத்தில் அறிவிப்பு
இதனிடையே, இன்று கூடிய ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே, ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது என்பது தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ளார். இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்த தாங்கள் தற்போதுவரை விருப்பத்துடன் உள்ளதாகவும், ஆனால் காலம் ஒத்துழைக்காத போது அதை ஒத்திவைக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
4 வாரத்தில் முடிவு
சர்வதேச அளவில் மிகுந்த கவனத்திற்குரிய ஒலிம்பிக் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகளில் இதுவரை ஒலிம்பிக் கமிட்டி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கென இதுவரை கோடிக்கணக்கில் செலவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதை ஒத்திவைப்பதால், பல்வேறு சிக்கல்களை சந்திக்க வேண்டிவரும் என்பது ஒலிம்பிக் கமிட்டியின் நியாயம். ஆனால் கொரோனா வைரஸ் நியாயங்களுக்கு அப்பாற்பட்டு செயல்பட்டுவரும் நிலையில், ஒத்தி வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.