டாக்கா: சமீபத்தில் வங்கதேசத் தலைநகர் டாக்காவில் நடந்த தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் டேக்வாண்டோ பிரிவில் மதுரையைச் சேர்ந்த ஆனந்த் பாண்டியராஜன் தங்கம் வென்றார்.சமீபத்தில் டாக்காவில் தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்தது. இதில் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.இதில் டேக்வாண்டோ போட்டிப் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் வென்று கொடுத்துள்ளார் மதுரையைச் சேர்ந்தவரும், தற்போது கோவாவில் வசிப்பவருமான ஆனந்த் பாண்டியராஜன். 80 கிலோ எடைப் பிரிவில் இந்த தங்கத்தை வென்றார் பாண்டியராஜன்.பிளஸ்டூ படித்து வரும் ஆனந்த் பாண்டியராஜன், இந்த 17 வயதிலேயே ஏகப்பட்ட பதக்கங்களை வென்று குவித்தவர். இவருடைய தந்தை பாண்டியராஜன் பாதுகாப்புத்துறையில் பணியாற்றியவர். பத்து ஆண்டுகளாக கோவாவில் வசித்து வரும் ஆனந்த் பாண்டியராஜன் அங்கு பிளஸ்டூ படித்து வருகிறார்.7 வயதிலேயே டேக்வாண்டோ மீது ஆனந்த்துக்கு காதல் பிறந்து விட்டது. 1999ம் ஆண்டு முதலாவது மாநில அளவிலான சாம்பியின்ஷிப் போட்டியில் பங்கேற்றார்.அதன் பின்னர் மாநில அளவிலும், தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஏகப்பட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளார்.சமீபத்தில் ஈரானில் நடந்த டேக்வாண்டோ போட்டியில், லைட்வெயிட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதேபோல சீனியர் பிரிவில் போட்டியிட்டு அரை இறுதி வரை வந்தார். துருக்கியில் நடந்த 7வது உலக ஜூனியர் டேக்வாண்டோ போட்டியிலும் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார்.டேக்வாண்டோவில் ஆனந்த், 2வது டேன் எனப்படும் கருப்பு பெல்ட் பெற்றவர் ஆவார். ஆனந்த் இதுவரை பல்வேறு போட்டிகளில் மொத்தம் 17 தங்கப் பதக்கங்களையும், 3 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.இந்தியாவுக்காக இதுவரை 28 முறை சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார் ஆனந்த்.தேசிய அளவில் 6 முறை (ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவு) தங்கப் பதக்கம் வென்றுள்ளார் ஆனந்த்.கோவா மாநில அளவில் இதுவரை 8 தங்கப் பதக்கங்களை வென்று தொடர்ந்து மாநில டேக்வாண்டோ சாம்பியனாக நடைபோட்டு வருகிறார். அதிலும், 2005ம் ஆண்டு முதல் இவர்தான் மாநில அளவில் சாம்பியன் பட்டத்தைத் தொடர்ந்து வென்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.டேக்வாண்டோ இந்தியாவில் வேகமாகப் பிரபலமாகி வருகிறது. ஆனால் அந்த விளையாட்டில் ஆர்வமாக உள்ள, சாதிக்கத் துடிக்கும் வீரர்களுக்குக் கை கொடுக்க ஸ்பான்சர்கள் இல்லாத நிலை இருப்பதாக ஆனந்த் வருத்தம் தெரிவிக்கிறார்.இதுகுறித்து அவர் கூறுகையில், டேக்வாண்டோ விளையாட்டு பிரபலமாகி வருகிறது. இருப்பினும் போதிய ஸ்பான்சர்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் பல வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர். சாதனை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் நிச்சயம் செலவு இருக்கும். அதேபோல டேக்வாண்டோ வீரர்களுக்கும் பயிற்சி உள்ளிட்ட செலவுகள் உள்ளன. படிப்பும் கூட பாதிக்கப்படுகிறது.எனவே கோவா அரசு அனைத்து வீரர்களுக்கும் விளையாட்டுக்கான ஸ்பான்சர் அளித்து அவர்களுடைய சுமையைக் குறைக்க முன்வர வேண்டும். இதன் மூலம் சிறு வயதிலிருந்தே பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக வீரர்களே செலவு செய்யும் நிலை மாறும். மேலும் சாதனை படைக்க முடியும் என்றார்.ஆனந்த்துக்கு டேக்வாண்டோ மட்டுமல்ல நன்றாக பாடவும் தெரியுமாம். அதேபோல, எலக்ட்ரானிக் கீபோர்டைக் கையில் கொடுத்தால், இசை மழை பொழிந்து விடுவாராம். கூடவே நல்ல டான்சரும் கூட. #13;