For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐ.பி.எல்: மலிங்காவின் பந்து வீச்சில் வீழந்த டெல்லி!

By Shankar
Malinga
டெல்லி: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை மலிங்காவின் அபார பந்து வீச்சின் உதவியுடன் மும்பை இந்தியன்ஸ் வென்றது.

4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. முதல் சுற்று ஆட்டங்கள் இப்போது நடந்து வருகின்றன.

போட்டியின் 4-வது லீக் ஆட்டத்தில் சச்சின் தெண்டுல்கர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷேவாக் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று மோதின.

சிறிய காயம் காரணமாக மும்பை அணியில் சைமண்ட்ஸ் சேர்க்கப்படவில்லை. டாஸ் ஜெயித்த ஷேவாக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பெரிய ஸ்கோர் குவித்து மும்பை அணிக்கு நெருக்கடி அளிக்க விரும்புவதாக அப்போது அவர் கூறினார். ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரது இலக்கு சுக்கு நூறாகி போனது.

ஷேவாக்கும், டேவிட் வார்னரும் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். வழக்கம் போல் ஆக்ரோஷமாக தொடங்கிய ஷேவாக், ஹர்பஜன்சிங் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

ஆனால் 2-வது ஓவரிலேயே இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா, ஒரே ஓவரில் டெல்லிக்கு இரட்டை அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்தில் வார்னர் (1 ரன்) மற்றும் உன்முக் சந்த் ஆட்டமிழந்தனர். உன்முக் சந்துக்கு இது முதல் போட்டி.

ஷேவாக் ரன்-அவுட்:

இதனால் எச்சரிக்கையான ஷேவாக், உலக கோப்பையை போல் மலிங்காவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்துவிடக்கூடாது என்பதற்காக அவரது அடுத்த ஓவரில் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். அந்த ஓவரில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. இதன் மூலம் 4-வது ஐ.பி.எல்.-ல் முதல்முறையாக மெய்டன் ஓவர் வீசிய பவுலர் என்ற பெருமையை மலிங்கா பெற்றார்.

19 ரன்கள் எடுத்த ஷேவாக், எதிரணி கேப்டன் தெண்டுல்கரால் ரன்-அவுட் செய்யப்பட்டார். பின்னர் நமன் ஓஜா (29 ரன்), வேணுகோபால் ராவ் (26 ரன்) ஆகியோர் அணியை வீழ்ச்சியில் இருந்து மீட்க போராடி வீழ்ந்தனர். பிற்பகுதியில் மலிங்கா மீண்டும் அசுர பலத்துடன் தாக்கி டெல்லி அணியை முற்றிலும் சிதைத்தார். வேணுகோபால் ராவ், மோர்னே மோர்கல் (0) ஆகியோருக்கும் மலிங்காவின் பந்து வீச்சில் ஸ்டம்பு பறந்தது. கடைசியில் அசோக் திண்டாவும் (0) மலிங்கா பந்துக்கு இரையாக, டெல்லி அணி 17.4 ஓவர்களில் 95 ரன்களில் சுருண்டது.

டெல்லி அணியில் 5 பேர் டக்-அவுட் ஆனார்கள். இதில் சுமார் ரூ.8.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் இர்பான் பதானும் அடங்குவார்.

ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி 100-க்குள் ஆல்-அவுட் ஆனது இது 2-வது முறையாகும். முன்னதாக 2008-ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக 87 ரன்களில் சுருண்டுள்ளது.

மும்பை அணி தரப்பில் மலிங்கா 3.4 ஓவர்களில் ஒரு மெய்டனுடன் 13 ரன்களே விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் 4 பேர் கிளீன் போல்டு என்பது கவனிக்கத்தக்கது. ஹர்பஜன்சிங் தனது பங்குக்கு 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

மும்பை அணி வெற்றி:

பின்னர் மும்பை அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேக்கப்ஸ் (1 ரன்) மோர்னே மோர்கல் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தாலும் மற்றொரு ஆட்டக்காரரும், கேப்டனுமான சச்சின் தெண்டுல்கரும் நிதானமாக ஆடினர். சச்சின் 6 ரன்கள் எடுத்திருந்தபோது கொடுத்த ஒரு கேட்ச்சை ஸ்லிப்பில் நின்ற ஷேவாக் நழுவவிட்டார். இதற்கிடையே 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய அம்பத்தி ராயுடு (14 ரன்) ரன்-அவுட் ஆகி வெளியேறினார்.

இதை தொடர்ந்து தெண்டுல்கருடன், ரோகித் ஷர்மா கைகோர்த்தார். இருவரும் மேற்கொண்டு விக்கெட் விழாமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். மும்பை அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தெண்டுல்கர் 46 ரன்களுடனும் (50 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரோகித் ஷர்மா 27 ரன்களுடனும் (30 பந்து, 3 பவுண்டரி ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

மும்பை இந்தியன் வீரர் மலிங்கா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

3வது சிறந்த பந்துவீச்சு

ஐ.பி.எல்.-ல் 3-வது சிறந்த பந்து வீச்சு

டெல்லி டேர்டெவில்ஸ் அணியை நிலைகுலைய வைத்த மலிங்கா 13 ரன்களே விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். ஐ.பி.எல். வரலாற்றில் இது 3-வது சிறந்த பந்து வீச்சாகும்.

2008-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்விர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 14 ரன்கள் விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்ததே ஐ.பி.எல்-ல் இதுவரை மிகச்சிறந்த பந்து வீச்சாக இருந்து வருகிறது.

பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே 2009-ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிராக 5 ரன்னுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது இந்த சாதனை வரிசையில் 2-வது இடம் பெற்றுள்ளது.

ஐபிஎல்4 மேலும் செய்திகள்

Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011
English summary
Sri Lankan Lasith Malinga aimed his yorkers perfectly to pick up five wickets for 13 runs to help Mumbai Indians to a thumping win against Delhi Daredevils in the Indian Premier League (IPL) on Sunday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+