வேடிக்கை பார்க்காதீங்க நீங்க விளையாட வந்தவங்க.. ஹாக்கி அணிக்கு யாராவது சொல்லுங்கப்பா!
புவனேஸ்வர்: உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரில் ஒரு லீக் ஆட்டத்தில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஜெர்மனியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.
ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடந்து வருகிறது.
இதில் பி பிரிவில் உள்ள இந்திய, தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

நடப்பு சாம்பியனிடம் தோல்வி
இரண்டாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவிடம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. நேற்று நடந்த மூன்றாவது லீக் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஜெர்மனியிடம் தோல்வியடைந்தது.

ஒரு வெற்றிகூட இல்லை
இதன் மூலம், லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களில் இரண்டில் தோல்வி, ஒன்றில் டிராவுடன் இந்திய அணி முடித்துக் கொண்டது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. அதனால் அடுத்து நடைபெற உள்ள கால் இறுதியில், ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் இந்திய அணி விளையாட உள்ளது

மகுடிக்கு மயங்கிய பாம்புகள்
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, வலிமையை காட்டிய இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சமபலத்தைக் காட்டியது. ஆனால், நேற்று நடந்த ஆட்டத்தில், போட்டியை வேடிக்கைப் பார்க்க வந்தவர்கள் போல் இந்திய அணி விளையாடியது. எதிரணி கோலடிக்கும்போது கைத்தட்டவில்லை. மற்றபடி, மகுடிக்கு மயங்கிய பாம்பாக இந்திய அணி விளையாடியது.

இனியாவது வெற்றி கிடைக்குமா
மயக்கம் தெளிந்து காலிறுதியிலாவது வெற்றியைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் போட்டிகளில், 2014-15ல், வெண்கலம் வென்றதே இந்திய அணியின் அதிகபட்ச முன்னேற்றமாகும்.


Click it and Unblock the Notifications