டோக்கியோ : ஒலிம்பிக் ஜோதி கிரீஸில் இருந்து ஜப்பான் சென்று அடைந்தது. ஆனால், அதை வரவேற்க ஆளே இல்லை.
2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் நடக்க உள்ளது. கடந்த பிப்ரவரி வரை ஒலிம்பிக் போட்டிகளுக்கு எந்த சிக்கலும் ஏற்படவில்லை.
ஆனால், அதன்பின் கொரோனா தாக்கம் அதிகரித்ததை அடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்தது.
காரணம், கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் வீரர்கள் ஜப்பானில் பங்கேற்க நேரும். அது உலகம் இதுவரை சந்தித்து வரும் கொரோனா பாதிப்புகளை மிஞ்சும் அளவுக்கு கடுமையாக இருக்கக் கூடும் என்ற அச்சம் உள்ளது.
இந்த நிலையில் ஜப்பான் அரசு ஒலிம்பிக் தொடர் திட்டமிட்டபடி நடக்கும். ஜூலை 24 தான் போட்டிகள் துவங்க உள்ளது என்பதால் அதற்குள் நிலைமை கட்டுக்குள் வரலாம் என நம்பிக்கையுடன் உள்ளது.
இதற்கிடையே ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி கிரீஸில் இரு வாரங்களுக்கு முன் குறைந்த நபர்கள் மட்டுமே இருக்க நடந்து முடிந்தது.
அந்த ஜோதி வெள்ளிக்கிழமை அன்று ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ள ஜப்பானை வந்தடைந்துள்ளது. முதலில் அதை வரவேற்க ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி, ஒலிம்பிக் அமைச்சர் செய்க்கோ ஹஷிமோட்டோ ஆகியோர் வருவதாக இருந்தது.
ஆனால், கொரோனா அச்சம் காரணமாக அவர்கள் உட்பட எந்த முக்கிய நபரும் ஒலிம்பிக் ஜோதியை வரவேற்க வரவில்லை. தற்போது ஜப்பான் வந்தடைந்துள்ள ஒலிம்பிக் ஜோதி டோஹோகு பகுதியை சுற்றி வரும் என கூறப்படுகிறது.
ஒலிம்பிக் ஜோதி சுற்றி வரும் பகுதிகளில் மக்கள் யாரும் இருக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிகளில் நடைபெற இருந்த பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.