பாரா ஒலிம்பிக்: ஒரே தொடரில் இரண்டு பதக்கங்கள்.. அவனியின் ஆகப்பெரும் சாதனை!
டோக்கியோ: பாரா ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை அவனி.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக 54 பேர் பங்கேற்கின்றனர்.
துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான கலப்பு (ஆர்-3) 10 மீ., 'ஏர் ரைபிள் புரோன்' (எஸ்.எச்-1) பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் அவனி லெஹரா, தீபக் சைனி, சித்தார்த்தா பாபு பங்கேற்றனர்.

தங்கப்பதக்கம்
இதில் அனைவரும் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறாமல் வெளியேறிய நிலையில் அவனி ஒற்றையாளாக பதக்கங்களை குவித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் அவனி லெகாரா தங்கப்பதக்கத்தை வென்று சாதித்தார். இந்த டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கமாக அமைந்தது. மேலும் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் SH1 இறுதிப்போட்டியில் இவர் 249.6 புள்ளிகள் பெற்று உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

வெண்கலப்பதக்கம்
இந்நிலையில் இன்று மேலும் ஒரு பதக்கத்தை அவனி உறுதி செய்துள்ளார். இன்று மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் 50 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் அவனி லெகாரா 445.9 புள்ளிகளை பெற்று வெண்கலம் வென்றார்.

வரலாற்று சாதனை
ஒலிம்பிக், பாராலிம்பிக் இரண்டிலும் இதுவரை துப்பாக்கிச்சுடுதலில் இந்திய அணி, மகளிர் பிரிவில் தங்கம் வென்றதில்லை. அவனியின் தங்கமே இப்பிரிவில் முதல் தங்கமாகும். மேலும் ஒரே பாரா ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வெல்லும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவனி பெற்றுள்ளார்.

யார் இந்த அவனி
19 வயதாகும் அவனி லெகரா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2015இல் ஜெய்ப்பூரில் உள்ள ஜகத்புரா விளையாட்டு வளாகத்தில் தமது பயிற்சியைத் தொடங்கினார். 2012ஆம் ஆண்டு நடந்த கார் விபத்து ஒன்றால் முதுகுத் தண்டுவட பாதித்தன் காரணமாக அவனி மாற்றுத்திறனாளி ஆனார். அவரது தந்தை விளையாட்டில் ஈடுபட ஊக்கமளித்ததால் இன்று பாரா ஒலிம்பிக் பதக்கம் கிடைத்துள்ளது. இந்த தன்னம்பிக்கை நாயகிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications