Paralympics: தொடக்கமே அதிரடி..பேட்மிண்டன் இறுதிச்சுற்று.. IAS அதிகாரி யாதிராஜ் வெள்ளி வென்று அசத்தல்
டோக்கியோ: பாரா ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் பிரிவில் இந்திய ஐஏஎஸ் அதிகாரி யாதிராஜ் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கிய இந்த பாரா ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டை நடத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக ஏற்கனவே பதக்கப்பட்டியல் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக துப்பாக்கிச் சுடுதல், பேட்மிண்டன், உயரம் தாண்டுதல் பிரிவுகளில் 2 பதக்கங்களை தட்டித்தூக்கியுள்ளனர்.
இந்தாண்டு பேட்மிண்டனில் இந்தியா அதிகப்படியான பதக்கங்களை வென்று வருகிறது. நேற்றைய தினம் நடைபெற்ற ஆடவர் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிரமோத் பாகட், இங்கிலாந்தின் டேனியல் பெதெல்லை வீழ்த்தி தங்கப்பதக்கம் தட்டிச்சென்றார். இதே போல நேற்று நடைபெற்ற ஆடவர் பேட்மிண்டன் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனோஜ் சர்கார் பதக்கம் வென்று அசத்தினார்.
இந்நிலையில் பேட்மிண்டன் பிரிவில் மேலும் ஒரு பதக்கம் இன்று உறுதியாகியுள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பதக்கம் வென்ற யாதிராஜ் இந்திய ஐஏஎஸ் அதிகாரி ஆவார். ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனின் இறுதிப்போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் பிரான்ஸ் வீரர் லூகாஸை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய வீரர் சுஹாஸ் யாதிராஜ், 21-15, 17-21, 15-21 என்ற செட் கணக்கில், பிரான்ஸ் வீரர் லூகாஸிடம் தோல்வியுற்றார்.
சுஹாஸ் யாதிராஜ், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தேசத்திற்காக அரசுப்பணியில் மட்டுமல்லாது விளையாட்டுத்துறையிலும் பெருமை சேர்த்துள்ள யாதிராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. யாதிராஜுன் பதக்கத்தின் மூலம் பாரா ஒலிம்பிக் தொடரின் பதக்கப்பட்டியலில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் இந்தியா 27வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications