இறுதிப்போட்டி
பாரா ஒலிம்பிக் போட்டியின் 13வது நாளான இன்று பதக்கத்துடன் தொடங்கியுள்ளது. இந்திய அணி. ஆடவர் ஒற்றையர் பிரிவு SH6 பேட்மிண்டனுக்கான இறுதிப்போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர், ஹாங்காங் வீரர் மான் காய்சூ- ஐ எதிர்கொண்டார். ரசிகர்களை நகம் கடிக்க வைக்கும் அளவிற்கு தொடக்கமே மிகவும் பரபரப்பாக இருந்தது.
தொடக்கம்
இரு தரப்பு வீரர்களும் விட்டுக்கொடுக்காமல் அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்ததால் முதல் செட்டில் 5 - 5 பின்னர் 11 - 10 என நெருக்கமாக சென்றுக் கொண்டிருந்தது. ஆனால் அதனை நீண்ட நேரம் நீடிக்க விடவில்லை கிருஷ்ணா நாகர். கடைசி கட்டத்தில் ஆக்ரோஷமாக விளையாடிய அவர், 21 - 17 என்ற புள்ளிக்கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
சமநிலையில் ஆட்டம்
2வது சுற்றில் மீண்டும் இரு வீரர்களும் சமபலத்துடன் மோதுக்கொண்டனர். இதனால் மீண்டும் 6 - 6 என நெருக்கமான புள்ளிகளுடன் சென்றது. ஆனால் இந்த முறை ஹாங்காங் வீரரின் பக்கம் வெற்றி வாய்ப்பு சென்றது. அவர் 16 - 21 என்ற புள்ளிக்கணக்கில் 2வது செட்டை கைப்பற்றினார். இதனால் ஆட்டம் 1 - 1 என சமநிலை அடைந்தது.
தங்கப்பதக்கம்
இதனையடுத்து ஆட்டத்தின் வெற்றியாளரை நிர்ணயிக்கக்கூடிய 3வது செட்டில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் சுதாரித்துக்கொண்டார். தொடக்கத்திலேயே அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 21 - 17 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றார். இதனால் பேட்மிண்டனில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பாரா ஒலிம்பிக் தொடரின் பதக்கப்பட்டியலில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் இந்தியா 24 இடத்திற்கு முன்னேறியது.