மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த தகராறு தொடர்பாக நடிகர் ஷாருக்கான் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு மே மாதம் மும்பை வான்கடே மைதானத்தில் ஐ.பி.எல். போட்டி நடைபெற்றது. அப்போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கானுக்கும் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது.
போலீஸ் உதவி கமிஷனர் ஒருவரையும் ஷாருக்கான் தள்ளி விட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகராறின் போது ஷாருக்கான் அவதூறான வார்த்தைகளை சிறுவர்கள் முன் பேசினார். அவரது மகளும் அவர் பேசுவதை பார்த்துக் கொண்டு இருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே விசாரணை நடத்தி வான்கடே ஸ்டேடியத்தில் நுழைய தடை விதித்தது. பின்னர் அந்த நடவடிக்கையை வாபஸ் பெற்றுக் கொண்டது.
இதனிடையே ஷாருக்கான் சிறுவர்கள் முன் அவதூறாகவும், அசிங்கமாகவும் பேசியது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்தப் புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யுமாறு போலீசுக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஷாருக்கானின் பேச்சு சிறுவர்களின் மனதை பாதிக்கும் வகையில் உள்ளது. இது அவர்களின் உரிமைக்கு எதிரான தாக்குதல் ஆகும். அவர் செய்தது சிறுவர்கள் நீதி சட்டப்படி குற்றம் ஆகும் என்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.