பாட்னா : 2019 புரோ கபடி லீகில் பெங்களூரு புல்ஸ் அணி தெலுகு டைட்டன்ஸ் அணியை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.
இந்த சீசனில் தொடர்ந்து தன் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்துள்ளது பெங்களூரு புல்ஸ் அணி.
பெங்களூரு அணியின் பவன் செஹ்ராவத்தின் அசத்தல் ரெய்டுகள் தான் பெங்களூரு அணியின் வெற்றி நடைக்கு முக்கிய காரணம். தெலுகு அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார். தெலுகு அணிக்கு எதிராக அவர் மட்டுமே 17 புள்ளிகள் பெற்றார்.
மேலும் இந்தப் போட்டியில் பவன் செஹ்ராவத் புரோ கபடி லீகில் தன் 400வது ரெய்டு புள்ளியை கடந்தார். இந்த மைல்கல்லை அவர் வெறும் 61 போட்டிகளில் எட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியின் முடிவில் பெங்களூரு அணி 47 - 26 என்ற புள்ளிக் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இது பெங்களூரு புல்ஸ் அணிக்கு இரண்டாவது மிகப் பெரிய வெற்றி ஆகும்.
மறுபுறம் தெலுகு அணி தான் ஆடிய ஆறு போட்டிகளிலும் தோல்வி அடைந்து சோதனையான கட்டத்தில் உள்ளது. பெங்களூரு புல்ஸ் அணி இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.