மும்பை: மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடாவுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் வீரர்களான வீரேந்தர் சேவாக், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக வலம் வந்த ரத்தன் டாடா, நேற்று வயது மூப்பு காரணமாக உடல்நிலை மோசமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் 86 வயதில் காலமானார். சாதாரண உப்பு முதல் பிரம்மாண்ட கார் உற்பத்தி வரை இந்தியாவின் அனைத்து நகரங்களில் தொழில் செய்தவர் ரத்தன் டாடா.

தொழிலதிபராக மட்டுமல்லாமல் மனிதநேய பண்பாளராகவும் ரத்தன் டாடா பார்க்கப்பட்டு வந்ததால், அவரின் இழப்பு அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் கடந்து சாதாரண மக்களையும் சோகப்படுத்தியுள்ளது. இந்திய மக்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்து வந்த ரத்தன் டாடாவுக்கு மக்கள் அனைவரும் சோசியல் மீடியா மூலமாக புகழஞ்சலி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மறைந்த ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ரத்தன் டாடா தனது வாழ்க்கை மட்டுமல்லாமல் இறப்பிலும் கூட இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளார். அவருடன் நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்தது வாழ்க்கையில் கிடைத்த அதிர்ஷ்டமாக பார்க்கிறேன். ஆனால் லட்சக்கணக்கான மக்கள் அவரை நேரில் கூட சந்தித்ததில்லை.
ஆனாலும் நான் உணரும் துயரை அவர்களும் உணர்வது தான் ரத்தன் டாடா செய்துள்ள தாக்கம். விலங்குகள் மீதான அன்பில் தொடங்கி பிலாந்தெரபி வரை, இல்லாதவர்களை மீதான அக்கறை மூலமாக தான் உண்மையான வளர்ச்சியை அடைய முடியும் என்ற பாதையை காட்டியுள்ளார். நீங்கள் உருவாக்கிய நிறுவனங்கள், தத்துவங்கள் மூலமாக உலகின் கடைசி நிமிடம் வரை உங்களின் பெயரும், சாதனைகளும் நிலைத்து நிற்கும் என்று பதிவிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கரை தொடர்ந்து முன்னாள் வீரர்களான சேவாக், ஹர்பஜன் சிங், இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரத்தன் டாடாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் உள்ளது. 1995ஆம் ஆண்டு டைட்டன் கோப்பை தொடங்கி தற்போது ஐபிஎல் வரை ஏராளமான கிரிக்கெட் தொடர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்திருக்கிறார்.
அதேபோல் ஃபார்முலா 1 கார் பந்தய வீரர் நரைன் கார்த்திகேயனுக்கு ஸ்பான்சர்ஷிப் செய்துள்ளார். அதேபோல் கிரிக்கெட் மட்டுமல்லாமல் குத்துச்சண்டை, வில்வித்தை உள்ளிட்ட ஏராளமான விளையாட்டுகளுக்கு அகாடமியை அமைத்து வீரர்களுக்கு உதவி இருக்கிறார். இதனால் ரத்தன் டாடாவின் மறைவு விளையாட்டு ரசிகர்களுக்கும் சோகத்தை அளித்துள்ளது.