பிரேசிலை மிரட்டும் "ஜிக்கா".. சரிந்தது ஒலிம்பிக் டிக்கெட் விற்பனை
ரியோ டி ஜெனீரோ: ஜிக்கா வைரஸ் பீதியால் ஒலிம்பிக் டிக்கெட்டுகளில் முப்பது சதவீதம் இன்னும் விற்பனையாகவில்லை. இதனால் பிரேசில் அரசு கவலையில் ஆழ்ந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இந்த முறை பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் வரும் ஆகஸ்ட் 5 முதல் 21 வரை நடைபெறுகிறது. ரியோ டி ஜெனீரோவில் நடைபெறுவதால் இது ரியோ ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது. இது நவீன ஒலிம்பிக்கின் 31-ஆவது போட்டியாகும்.
மேலும் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் முதல் தென் அமெரிக்க நகரம் என்ற பெருமை ரியோ டி ஜெனீரோவுக்கு கிடைத்துள்ளது. அதேபோல், போர்ச்சுகீசிய மொழி பேசப்படும் நாட்டில் நடைபெறும் முதல் ஒலிம்பிக் போட்டியும் இதுதான்.
இப்படியாக பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருந்தாலும், ஒலிம்பிக்கைக் காண மக்களிடம் அதிக ஆர்வம் இல்லையாம். காரணம் ஜிக்கா வைரஸ் பீதி.

ஜிக்கா கொசு...
கொசு மூலமாக பரவும் இந்த நோய் முதன் முதலில் கடந்த 1947ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், கடந்தாண்டு தான் இது தீவிரமாக பிரேசிலில் பரவியது. டெங்கு, சிக்கன்குன்யா ஆகியவற்றை பரப்பும் ஏடிஸ் ஏகிப்தி கொசு மூலமே ஜிக்கா வைரஸ் பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பிரேசில்...
எனினும் இந்த நோய் பரவல் கண்டுபிடிக்கப்பட்டதுமே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அனைவரும் கொசு கடியில் இருந்து தங்களை காத்துக்கொள்ளும்படி பிரேசில் அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

பீதி...
ஆனால் ஜிக்கா வைரஸ் பீதி உலகம் முழுவதும் பரவியது. இதனால் மக்கள் பிரேசிலுக்கு செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது கோடை காலம் என்பதால் அப்போது கொசுக்களின் தாக்கம் அவ்வளவாக இருக்காது என்பது பிரேசில் அரசின் கருத்து.

டிக்கெட் விற்பனை மந்தம்...
அதோடு அங்கு ஜிக்கா வைரஸ் தாக்கம் குறைந்து விட்டதாக அரசு கூறி வருகிறது. ஆனபோதும், போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பிரேசில் செல்ல அஞ்சும் சூழல் தொடரத் தான் செய்கிறது. இது ஒலிம்பிக் டிக்கெட் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

30% டிக்கெட்டுகள் தேக்கம்...
ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கவிழாவிற்கு இன்னும் சரியாக ஒருமாதம் கூட இல்லாத நிலையில், போட்டிகளைக் காண்பதற்காக 30 சதவீத டிக்கெட்டுகள் இன்னும் விற்பனையாகவில்லையாம். இது பிரேசில் அரசை கவலையில் ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் போராட்டம்...
ஏற்கனவே சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி அந்நாட்டில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் போராட்டத்தால் அங்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

துரத்தும் ஜிக்கா...
ஒலிம்பிக் போட்டியைக் காணவரும் பார்வையாளர்களுக்கு அவர்களே ஒரு புறம் கிலி ஏற்படுத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க ஜிக்கா வைரஸ் பீதியும் பார்வையாளர்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் சோதனை மேல் சோதனை என கன்னத்தில் கை வைத்து கவலையில் அமர்ந்துள்ளதாம் பிரேசில் அரசு.


Click it and Unblock the Notifications