டெல்லி: காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு, போதைப் பொருள் எடுத்துக் கொண்டதாக தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் மகளிர் 53 கிலோ எடைப் பிரிவில் 192 கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார் இந்தியாவின் சஞ்சிதா சானு. கடந்த காமன்வெல்த் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார்.
சானுவின் ரத்த மாதிரியில், தடை செய்யப்பட்ட போதைப் பொருள் இருப்பதாக உலக பளுதூக்கும் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அதையடுத்து அவர் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆனால், இந்த ரத்த மாதிரி எப்போது எடுக்கப்பட்டது, எப்போது பரிசோதனை செய்யப்பட்டது போன்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.
கடந்தாண்டு நவம்பரில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 53 கிலோ எடைப் பிரிவில் சானு பங்கேற்றார். அதற்கான பரிசோதனையாக இது இருந்தால், ஆறு மாதங்களாக ஏன் முடிவுகள் வெளியிடப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கான ரத்த மாதிரியாக இருந்தால், இரண்டாவது ரத்த மாதிரியின் முடிவுகளில்தான் சஞ்சிதா சானு உண்மையில் போதை மருந்து எடுத்துக் கொண்டாரா என்பது நிரூபிக்கப்படும்.
அவ்வாறு அவர் போதை மருந்து எடுத்துக் கொண்டது நிரூபணமானால், போட்டிகளில் பங்கேற்க சானுவுக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்படும்.