சென்னை: தமிழக கால்பந்து ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி. ஏர்டெல் நிறுவனம் ரூ. 100 கோடி செலவில் தமிழ்நாட்டில் கால்பந்து அகாடமி ஒன்றை துவக்கவிருக்கிறது. இதற்கு மான்செஸ்டர் யுனைடெட் அணியினர் பயிற்சி அளிக்கவிருப்பதால், இனி தமிழகத்தில் இருந்து சர்வதேச கால்பந்து நட்சத்திரங்கள் அதிகம் உருவாகுவார்கள்.பாரதி-ஏர்டெல் நிறுவனமும் இந்திய கால்பந்து கூட்டமைப்பு இணைந்து இளைஞர்கள் மத்தியில் கால்பந்து விளையாட்டை பிரபலப்படுத்த முயற்சித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவில் கால்பந்துக்கு புகழ்பெற்ற கோவாவில் அகாடமி ஒன்றை அம்மாநில அரசுடன் மேற்கொள்ள முயற்சித்தது. ஐரோப்பாவின் பிரபல கால்பந்து கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் மூலம் இந்த அகாடமியில் இருக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முன்வந்தது.ஆனால், ரூ. 100 கோடி செலவில் துவக்கப்படும் இந்த அகாடமி துவக்குவதற்கு தேவையான 75 ஏக்கர் நிலத்தை வழங்குவதில் கோவா அரசு மெத்தனபோக்கை மேற்கொண்டது. இதையடுத்து ஏர்டெல் நிறுவனம் தனது திட்டத்தை கோவாவில் இருந்து வாபஸ் பெற்று கொண்டது. அதை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடிவு செய்தது.இந்நிலையில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தொழில்நுட்ப கமிட்டி தலைவர் சிஆர் விஸ்வநாதன் இந்த திட்டத்தை தமிழகத்துக்கு கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டார். இது தொடர்பான தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தின் ஆலோசனை கூட்டம், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் தலைமையில் கடந்த 23ம் தேதி நடந்தது.இக்கூட்டத்தில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்து விரிவாக ஆராய்ந்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பணி தமிழ்நாடு விளையாட்டு வளர்ச்சி ஆணையத்தின் செயலாளர் சுதீப் ஜெயினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.