தோற்பதற்காக பணம் தருவதாக கூறிய ரஷ்ய வீரர்கள்: இந்திய மல்யுத்த வீரர் சுஷில்குமார் பரபர புகார்!
டெல்லி: ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டியில் தோற்க வேண்டும் என்றும், அதற்காக நிறையப் பணம் தருவதாகவும் என்னை ரஷ்ய வீரர்கள் அணுகினர் என்று பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் உலக சாம்பியன் சுஷில் குமார்.
கிரிக்கெட்டில் மட்டுமே இருந்து வரும் மேட்ச் பிக்ஸிங் தற்போது பிற விளையாட்டுகளுக்கும் பரவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2010ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த உலக மல்யுத்த சாம்பியன் போட்டியில் தங்கம் வென்றவர் சுஷில்குமார். அந்தப் போட்டியில்தான் தன்னை ரஷ்யர்கள் பணத்துடன் அணுகியதாக கூறியுள்ளார் சுஷில் குமார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது...

ஆலன் கோகவேவுடன் மோதத் தயாரானபோது
மாஸ்கோ மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நான் ரஷ்ய வீரர் ஆலன் கோகவேவை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தேன். அப்போது அந்த அணியைச் சேர்ந்த ஒருவர் என்னை அணுகினார். போட்டி குறித்துப் பேச வேண்டும் என்று கூறினார்.

பணம் தர்றோம்ங்க.. தோத்துருங்க..
நான் அவரிடம் பேசியபோது, ரஷ்ய வீரருக்கு சாதகமாக தோற்று விடுமாறும், பெரும் பணம் தருவதாகவும் அவர் கூறினார். அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன்.

கோடிகளில்
அவர் கொடுப்பதாக சொன்ன பணம் சாதாரணமானதல்ல, சில கோடிகள் ஆகும். அது ஒரு மல்யுத்த வீரருக்கு பெரும் பணம்தான். ஆனால் நான் அதை நிராகரித்து விட்டேன். எனக்கு என் நாட்டின் பெருமையும், எனது வெற்றியும்தான் முக்கியமாக தெரிந்தது.

அடித்து நொறுக்கி வென்றேன்
அந்த இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரரை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றேன் என்று கூறியுள்ளார் சுஷில் குமார்.


Click it and Unblock the Notifications