டெல்லி: ஐபிஎல் போட்டிகளால்தான் இந்திய கிரிக்கெட் இன்று பொலிவிழந்து, சீர்குலைந்து போய் நிற்கிறது. இதன் காரணமாகவே தொடர்ந்து தோல்விகளைத் தழுவி வருகிறது என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மற்றும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அடுத்தடுத்து 2 ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவை வெற்றிகரமாக வீழ்த்தி அதிர வைத்துள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரையும் அது கைப்பற்றி விட்டது. இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திலும், விரக்தியிலும் மூழ்கிப் போயுள்ளனர்.
நாட்டை உலுக்கி வரும் பாலியல் பலாத்காரக் கொடுமைகள் போன்றவற்றையும் மீறி வெறித்தனமாக கிரிக்கெட் பார்ப்போர்தான் இந்தியாவின் தோல்வியால் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் இந்தியாவின் இந்தத் தொடர் தோல்விகளுக்கு ஐபிஎல் போட்டிகளே காரணம் என்று கவாஸ்கரும், இம்ரான் கானும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில், பாகிஸ்தானை முதலில் பேட் செய்ய இந்தியா பணித்தது மிகப் பெரிய ரிஸ்க். இதுதான் அவர்களுக்குப் பாதகமாகி விட்டது என்றார்.
கவாஸ்கர் கூறுகையில், இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே சரியாக பேட் செய்யவில்லை. அவர்கள்தான் இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும். இந்தியாவில் எது பிரபலம்... பேட்டிங்தானே.. அதிலேயே நாம் சொதப்பினால் என்ன செய்வது. பந்து வீச்சாளர்களை விட பேட்ஸ்மேன்களுக்குத்தான் பிட்ச்சின் சாதக பாதகம் நன்றாக தெரியும், சூழல் நன்றாகப் புரியும். அவர்களே சரியாக ஆடாவிட்டால் வேறு யார் வந்து கை கொடுப்பார்கள் என்று காட்டமாக கேட்டார் கவாஸ்கர்.
மேலும் அவர் கூறுகையில், உலகக் கோப்பை போட்டியோடு இந்திய அணியின் பார்ம் போய் விட்டது. அன்று முதல் இன்று வரை தொடர்ந்து தடுமாறியபடியே உள்ளனர் என்றார் கவாஸ்கர்.
இம்ரான் கான் கூறுகையில், 2011 முதல் நான் இந்திய அணியின் ஆட்டங்களைய நெருக்கமாக பார்த்து வருகிறேன். இந்தியாவின் ஐபிஎல்தான் இந்திய அணியின் தடுமாற்றத்துக்கு முக்கியக் காரணம் என்பது எனது கருத்து. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும், டுவென்டி 20 கிரிக்கெட்டுக்கும் இடையே மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. அதேபோல ஒரு நாள் போட்டிகள். இவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தை சரியாக உணர்ந்து, அதற்கேற்ப மாறி ஆட வேண்டியது அவசியம். அதைச் செய்ய இந்திய வீரர்கள் தவறி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடக் கூடியவர் 20-20 போட்டியில் சிறப்பகா விளையாடலாம். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும் அவர் சிறந்த வீரராக இருக்க முடியும் என்பது சாத்தியமில்லாதது என்றார் இம்ரான்.
இதே கருத்தையே கவாஸ்கரும் எதிரொலித்தார். அவர் கூறுகையில், ஐபிஎல்லின் நோக்கமே புரியவில்லை. ஐபிஎல்லால் பலமுறை இந்திய அணி சர்வதேச அளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல முக்கியத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. ஐபிஎல் போட்டிகள்தான் இந்திய அணியை கடுமையாக பாதித்துள்ளது என்பதே எனது கருத்தாகும் என்றார் கவாஸ்கர்.