ஜோகன்னஸ்பர்க்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் பயிற்சி போட்டியில் இந்திய அணி 198 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 103 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி தென் ஆப்ரிக்காவில் நடக்கிறது. அதற்கு முன்னதாக தற்போது பயிற்சி போட்டிகள் நடந்து வருகிறது.
நேற்று நடந்த பயிற்சி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்திய அணியில் சச்சின், கம்பீர் இடம்பெறவில்லை.
டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக வந்த ரைடர் அணிக்கு அதிரடி துவக்கம் தந்தார். அவர் 48 பந்தில் 57 ரன்கள் எடுத்து அசத்தினார். மெக்கலம் 15 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த குப்டீல் தன் பங்கிற்கு 63 ரன்கள் சேர்த்து அவுட்டானார். ரோஸ் டெய்லர் 23, எலியட் 30 ரன்கள் எடுத்தனர். கடைசியில் வந்த நெய்ல் புரூம் இந்திய பந்துவீச்சை விளாசினார். ஆர் பி சிங் வீசிய 49வது ஓவரில் 3 சிக்சர், 1 பவுண்டரி உட்பட 25 ரன்கள் எடுக்கப்பட்டது.
புரூம் 46 பந்தில் 66 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்சர், 5 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் நியூசிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்தது.
பேட்ஸ்மேன்கள் சொதப்பல்...
அடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் நல்ல துவக்கம் தர தவறினார். அவர் 20 ரன்களுக்கு அவுட்டானார். இவரை தொடர்ந்து 34 பந்தில் 37 எடுத்திருந்த டிராவிட்டும் அவுட்டானார்.
துவக்க வீரர்கள் இருவரும் வெளியேறியதை அடுத்து கேப்டன் டோணி, ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் 9 ரன்களுக்கு அவுட்டானார். ரெய்னா 31 ரன்கள் எடுத்தார்.
அடுத்து வந்த யூசுப் பதான் (13), யுவராஜ் (9), பிரவீன் குமார் (1) வருவதும் போவதுமாக இருந்தனர். அபிஷேக் நாயர் 41 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேற இந்திய அணி 40.3 ஓவரில் 198 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி, 103 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.