ஜோகன்னஸ்பர்க்: பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு பறிபோனது. ஆனால், இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆறுதல் தேடி கொண்டது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றது. ஆஸ்திரேலியாவுடனான அடுத்த போட்டி மழையால் ரத்தானது.
இதையடுத்து இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதும் லீக் போட்டியின் முடிவை எதிர்பார்த்து காத்திருந்தது. இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா அரையிறுக்கு நுழைய முடியும் என்று சூழ்நிலை இருந்தது.
அரையிறுதியில் ஆஸ்திரேலியா...
ஆனால், நேற்று நடந்த இப்போட்டியில் பாகிஸ்தான் மந்தமாக விளையாடியது. 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. எளிய இலக்கை சேஸ் செய்த ஆஸ்திரேலியாவும் கடைசி பந்து வரை ஆட்டத்தை இழுத்து சென்றது.
கடைசிப் பந்து வரை விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வென்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
அடுத்துத் தொடங்கிய லீக் போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இம்முறை டாஸ் வென்ற டோணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணியில் சச்சின், ஆர் பி சிங், யூசுப் பதான் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக அபிஷேக் நாயர், பிரவீன் குமார், அமித் மிஸ்ரா களமிறங்கினர்.
பிரவீன் குமார், நெஹ்ரா கூட்டணி பந்துவீச்சில் மிரட்டியது. இவர்கள் இருவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். கேப்டன் டோணியும் பந்துவீசியதோடு ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் 36 ஓவரில் 129 ரன்களுக்கு சுருண்டது.
இதை சேஸ் செய்த இந்திய அணிக்கு கம்பீர் 6, டிராவிட் 4 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர். துவக்க வீரராக வந்த தினேஷ் கார்த்திக் 34 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பேட் செய்த விராத் கோஹ்லி 79 ரன்கள் எடுத்தார்.
இந்தியா 32.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆனால், இந்த வெற்றி இந்தியா அரையிறுதிக்குள் நுழைய கைகொடுக்கவில்லை.
நாளை நடக்கும் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும், 3ம் தேதி நடக்கும் மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் விளையாடுகின்றன.