டெல்லி: அடுத்த மாதம் லண்டனில் துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் வகையில், 2 இந்திய டெபிள் டென்னிஸ் வீரர்களுக்கு 16 நாட்கள் சீனாவில் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
அடுத்த மாதம் (ஜூலை) 27ம் தேதி லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்த டெபிள் டென்னிஸ் வீரர் செளமியாஜித் கோஷ் மற்றும் வீராங்கனை அங்கிதா தாஸ் ஆகியோர் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதிப் பெற்றனர். இதனையடுத்து ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் பெறும் வகையில், இருவருக்கும் சீனாவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
மொத்தம் 16 நாட்கள் நடைபெற உள்ள பயிற்சி முகாமில் பங்கேற்க செளமியாஜித் கோஷ், அங்கிதா தாஸ் ஆகியோருடன் பயிற்சியாளர் லிசிக் குச்சர்ஸ்கியும் சீனாவிற்கு செல்ல உள்ளார். இத்தகவலை இந்திய டெபிள் டென்னிஸ் சங்க பொது செயலாளர் தன்ராஜ் செளத்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தன்ராஜ் செளத்ரி கூறியதாவது,
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதை மனதில் கொண்டு செளமியாஜித் கோஷ், அங்கிதா தாஸ் ஆகியோர், பாட்டியாலாவில் உள்ள சாய் சென்டரில் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் டெபிள் டென்னிஸ் விளையாட்டிற்கு உலகிலேயே சிறப்பான பயிற்சி அளிக்கப்படுவது சீனாவில் உள்ள ஸிங்டிங்கில் தான். எனவே அங்கு இருவருக்கும் 16 நாட்கள் பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் லண்டனில் உள்ள சூழ்நிலையுடன் இந்திய வீரர்களுக்கு பழக்கம் ஏற்படும் வகையில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதற்கு 7 நாட்களுக்கு முன்னமே, இருவரும் லண்டன் செல்ல உள்ளனர்.
ஏற்கனவே இந்த ஆண்டு இருவரும் ஸ்வீடன் மற்றும் ஆஸ்திரியாவில் விளையாடி உள்ளதால், லண்டனின் உள்ள சூழ்நிலை நம் வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகிறேன் என்றார்.