ஒலிம்பிக் போட்டியை சீர்க்குலைக்க சதியா?- லண்டனில் சந்தேகத்திற்கு இடமான 6 பேர் கைது

லண்டன் ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிலையில் லண்டன் ஒலிம்பிக் போட்டியை சீர்க்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்த தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து லண்டன் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலையில் இன்று லண்டன் நகர் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட 1 பெண் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ள மைதானத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து போலீசார் கூறியதாவது,
மேற்கு லண்டனில் கைது செய்யப்பட்ட இந்த 6 பேரும், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தீவிரவாத நடவடிக்கைக்கு எதிரான சட்டம் 2000ன் பேரில் லண்டன் நகரின் நாலபுறமும் சோதனை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்திற்கு இடமான 6 பேரை கைது செய்துள்ளோம்.
கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள். ஒலிம்பிக் போட்டியை கருத்தில் கொண்டு இந்த சோதனை நடத்தப்படவில்லை என்றனர்.


Click it and Unblock the Notifications