டெல்லி: ரியோ ஒலிம்பிக் மகளிர் மாரத்தான் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீராங்கனை ஓ.பி. ஜெய்ஷாவின் புகார் குறித்து விசாரணை நடத்த இரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்துள்ளார்.
ரியோ டி ஜெனிரோவில் சமீபத்தில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்தது. இதில் இந்தியா சார்பில் கேரளாவை சேர்ந்த 33 வயது ஜெய்ஷா பெண்களுக்கான 42 கி.மீ மாரத்தனில் பங்கேற்றார். இந்த போட்டியில் 89வது இடத்தை பிடித்தார் ஜெய்ஷா. இலக்கை 2 மணி 47 நிமிடம் 19 வினாடிகளில் அவர் கடந்தார்.

ரியோ நேரப்படி காலை 9 மணிக்கு இந்த போட்டி தொடங்கியுள்ளது. அப்போது கடும் வெயிலும் இருந்துள்ளது. மாரத்தான் போட்டியை பொறுத்த வரை, சுமார் 8 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் பொது குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டிருக்கும். வீரர்கள் அதில் தண்ணீர் பாட்டில்கள் எனர்ஜி டிரிங்க்ஸ் எடுத்துக் கொள்ளலாம்.
அதுதவிர போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தண்ணீர், குளுகோஸ், பிஸ்கட் மற்றும் புத்துணர்வு அளிக்கக் கூடிய பொருட்களை அளிக்க வேண்டியது அந்தந்த நாடுகளின் கடமையாகும். ஆனால் இந்தியா சார்பில் இவை எதுவுமே ஜெய்ஷாவுக்கு வழங்கப்படவில்லை. இதனால் எட்டு கிலோ மீட்டருக்கு ஓரிடத்தில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சார்பில் வீரர்களுக்கு புத்துணர்ச்சி பானம் வைக்கப்பட்டிந்த இடத்தில் தான் ஜெய்ஷாவுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது.
பின்னர் பந்தைய எல்லையைக் கடந்த போது ஜெய்ஷா மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த அவரை காப்பாற்ற கூட இந்திய ஒலிம்பிக் அதிகாரிகள் யாரும் அருகில் இல்லை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து ஜெய்ஷா புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் வீராங்கனையின் புகார் குறித்து விசாரணை நடத்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் இருநபர் கொண்ட விசாரணைக் கமிட்டியை அமைத்துள்ளார்.
இதுகுறித்து விளையாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்புகார் குறித்து விசாரணை நடத்த விளையாட்டுத்துறை இணை செயலாளர் ஓங்கர் கேதியா, விளையாட்டுத்துறை இயக்குனர் விவேக் நாராயண் ஆகியோரை கொண்ட இருநபர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி விசாரணை நடத்தி இன்னும் 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் விஜய் கோயல் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.