வாஷிங்டன்: சர்வதேச டென்னிஸ் அரங்கை ஒரு காலத்தில் கலக்கிய மோனிகா செலஸ் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்டெபி கிராப் முன்னணியில் இருந்தபோது அவருக்கு கடும் போட்டியாக திகழ்ந்தவர் மோனிகா செலஸ்.
9 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செலஸ், 53 ஒற்றையர் பட்டங்கள் மற்றும் 6 இரட்டையர் பட்டங்களை வென்றவர்.
1991ம் ஆண்டு முதல் முறையாக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த அவர், தொடர்ந்து 178 வாரங்கள் முதலிடத்தில் இருந்தவர்.
இளம் வயதிலேயே டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை பிடித்தவர் என்ற பெருமையும் செலஸுக்கு உண்டு.
கடந்த 1993ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க்கில் டென்னிஸ் போட்டி ஒன்றில் அவர் விளையாடிக்கொண்டிருந்தபோது, ஸ்டெபி கிராபின் விசிறி ஒருவர் செலஸ் முதுகில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்தார்.
அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் அவர் டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. பின்னர் மீண்டும் டென்னிஸ் ஆட வந்த மோனிகா செலஸ் கனடா ஓபன் பட்டத்தை வென்றதுடன், யுஎஸ் ஓபன் இறுதிச் சுற்றுக்கும் முன்னேறினார்.
அதன்பிறகு கடந்த 1996ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை அவர் வென்றார். இது அவரது 9வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
2003ம் ஆண்டு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மோனிகா தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
2005ம் ஆண்டு நியூசிலாந்தில் மற்றொரு முன்னணி வீராங்கனையான மார்ட்டினா நவரத்திலோவாவுடன் இரண்டு காட்சி போட்டிகளில் ஆடிய மோனிகா செலஸ் அவற்றில் தோல்வியடைந்தார்.
அதன் பின்னர் டென்னிஸ் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் டென்னிஸிலிருந்து விடைபெறுவதாக செலஸ் அறிவித்துள்ளார்.