செஞ்சுரியன் பார்க்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டுவென்டி-20 தொடரை தென் ஆப்ரிக்கா 2-0 என வென்றது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட், 2 டுவென்டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வென்றது.
இதையடுத்து நடந்த முதல் டுவென்டி-20 போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்று 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்காவுக்கு ராபின் பீட்டர்சன் மற்றும் கிப்சன் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ராபின் பீட்டர்சன் 34, கிப்ஸ் 20 ரன்களுக்கு அவுட்டானார்கள்.
அடுத்து வந்த வீரர்கள் சொதப்ப தென் ஆப்ரிக்கா லேசான சரிவை சந்தித்தது. இந்நிலையில் களமிறங்கிய வான் டர் மெர்வி 30 பந்தில் அதிரடியாக 48 ரன்கள் எடுத்தார். தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு மைக்கேல் கிளார்க் 27, வார்னர் 20 ரன்கள் எடுத்தனர். மைக்கேல் ஹசி 27, ஒயிட் 23 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேற ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதையடுத்து தென் ஆப்ரிக்கா டுவென்டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ஒரு நாள் தொடர் வரும் ஏப்ரல் 3ம் தேதி துவங்குகிறது.
இங்கிலாந்து வெற்றி...
வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் மூன்று போட்டிகளில் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2-1 என்ற முன்னிலை பெற்றது. இந்நிலையில் நான்காவது போட்டி பிரிஜ்டவுனில் நடந்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீசுக்கு பிராவோ அரைசதம் கடந்து கைகொடுத்தார். அவர் 69 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் கெய்ல் (46), சந்தர்பால் (27), ராம்தின் (26) ஆகியோர் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் மழை பெய்ததால் டக்வொர்த்- லீவிஸ் முறைப்படி 20 ஓவரில் 135 என இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு மாற்றி நிர்ணயிக்கப்பட்டது. இதில் கேப்டன் ஸ்டிராஸ் அதிரடியாக 79 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அசத்த, இங்கிலாந்து 1 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வென்றது.
இதையடுத்து ஒரு நாள் தொடர் 2-2 என சமனுக்கு வந்துள்ளது. தொடருக்கு யாருக்கு என்பதை உறுதி செய்யும் ஐந்தாவது போட்டி வரும் ஏப்ரல் 3ம் தேதி செயின்ட் லுசியாவில் நடக்கிறது.