டெல்லி: விஜய் மல்லையாவின் ஐபிஎல் பெங்களூர் ராயல் சேலஞ்சர் அணிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதுகுறித்து கிருஷ்ணன் அகர்வால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளரான பெங்களூர் யுபி குழும தலைவர் விஜய் மல்லையா, ராயல் சேலஞ்ச் என்ற விஸ்கி வகையை விற்பனை செய்து வருகிறார்.
மது வகையின் பெயரை தனது அணியின் பெயராக அவர் சூட்டியுள்ளார். இதன் மூலம் அந்த மது வகையை அவர் விளம்பரப்படுத்துகிறார்.
மேலும், ராயல் சேலஞ்ச் விஸ்கியின் லோகோவையே, தனது அணியின் லோகோவாகவும் விஜய் மல்லையா வைத்துள்ளார். இது சட்டவிரோதமானதாகும்.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மது வகைகள், புகையிலை பொருட்கள் உள்ளிட்டவற்றை விளம்பரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் போட்டி நடைபெறும் பெங்களூர் கிரிக்கெட் மைதானத்தில், கிங்பிஷர் உள்ளிட்ட மது வகைகளின் விளம்பரங்கள் தாராளமாக காணப்படுகின்றன. கிரிக்கெட் என்ற பெயரில் தனது நிறுவனத்தின் மது வகைகளை விஜய் மல்லையை பிரபலப்படுத்திக் கொள்கிறார்.
இப்படிப்பட்ட விளம்பரங்களைத் தடுக்க அரசு முன்வராவிட்டால், சாதாரண குடிமக்கள் எங்கு போய் முறையிடுவது? என்று கேட்டிருந்தார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், சர்மா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
விசாரணையின் ஒரு கட்டத்தில் நீதிபதி ரவீந்திரன், மனுதாரரின் வக்கீலிடம், நீங்கள் கிரிக்கெட்டை மட்டும் பார்க்க வேண்டியதுதானே, ஏன் மதுவை பார்க்கிறீர்கள் என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
இறுதியில், மனுதாரரின் வாதத்தில் திருப்தி அடையாத நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.